2009-11-26 15:36:10

வியட்நாமின் ஜுபிலி கொண்டாட்டங்களுக்கு திருத்தந்தையின் செய்தி


நவ.26,2009 வியட்நாமில் கத்தோலிக்க நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டதன் 350ஆம் ஆண்டு நிறைவும் மறைமாவட்ட தலைமைப் பீடங்கள் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப் பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவும் கொண்டாடப்படுவதையொட்டி, தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் வெளியிட்டு செய்தியொன்றை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்.
வியட்நாம் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Peter Nguyen Van Nhonக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அந்நாட்டின் 117 மறைசாட்சிகளின் திருவிழாவன்று துவக்கப்பட்ட இந்த ஜுபிலி கொண்டாட்டங்கள் அம்மறைசாட்சிகளின் வாழ்வு எடுத்துக்காட்டுகளின் வழி, வியட்நாம் மக்களின் விசுவாசம் உறுதிப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். வியட்நாமின் மறைசாட்சிகளுள் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கும் Andre DungLacன் சாட்சிய வாழ்வு இக்குருக்களின் ஆண்டில் வியட்நாம் குருக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என ஆவல் கொள்வதாகவும், இந்த ஜுபிலி ஆண்டு வியட்நாம் சமூகத்திற்கு நற்செய்தி மதிப்பீடுகளான பிறரன்பு, உண்மை, நீதி மற்றும் நன்னெறி வாழ்வை வழங்கும் என நம்புவதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.