வெனெசுவேலா அரசுத் தலைவரின் தற்போதைய நடவடிக்கைகள் கத்தோலிக்கத் திருச்சபைத்து அச்சத்தை
ஏற்படுத்தியிருக்கின்றன
நவ.11,2009 வெனெசுவேலா நாட்டு அரசுத் தலைவர் ஹூகோ சாவேஸ், அந்நாட்டின் முக்கிய நிதி
மற்றும் வியாபார நிறுவனங்களைப் பறிமுதல் செய்திருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக
அந்நாட்டு கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் தெரிவித்தனர். அரசுத் தலைவரின் இந்நடவடிக்கையை
முன்னிட்டு ஆயர்கள் மத்தியில் நிலவும் பய உணர்வு பற்றிக் கருத்து தெரிவித்தத் தலத்திருச்சபை
பணியாளர்கள், திருச்சபையின் ஆலயங்கள், பள்ளிகள் மற்றும்பிற சொத்துக்கள் அபகரிக்கப்படக்கூடும்
மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் பணிகளை முடக்குவதற்கு முயற்சிக்கக்கூடும் என்று தெரிவித்தனர். தலைநகர்
கரகாஸில் மக்கள் நெருக்கம் அதிகமாகவுள்ள பகுதியில் ஆறு வாரங்களுக்கு முன்னர் உரையாற்றிய
ஒரு மாவட்ட ஆட்சியாளர், திருச்சபை நடத்தும் பல பள்ளிகளைப் பறிமுதல் செய்வதற்குத் திட்டங்கள்
இருப்பதாக அறிவித்ததையும் அப் பணியாளர்கள் ஜெர்மனியின் பிறரன்பு நிறுவனத்திடம் கூறினர்.
திருச்சபை, 21ம் நூற்றாண்டின் சோஷலிஸத்தின் பகைவன் என்று வெனெசுவேலா அரசுத் தலைவர் சாவேஸ்
குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.