சர்வதேச அளவிலான ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் விரைவில் கொண்டுவரப்பட வேண்டுமென்று
திருப்பீடம். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் அழைப்பு
நவ.11,2009 சர்வதேச அளவிலான ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் விரைவில் கொண்டுவரப்பட வேண்டுமென்று
திருப்பீடம். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் அழைப்புவிடுத்துள்ளன. உலகில் ஆயுத
வியாபாரத் தடை ஒப்பந்தம் கொண்டுவரப்படுவதற்குத் திருப்பீடத்துடன் சேர்ந்து முயற்சித்து
வரும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கையில்
இவ்வாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. உலகில், ஆயுத வியாபாரத்தைத் தடை செய்வது குறித்த
தூதரக மட்டத்திலான முக்கிய கருத்தரங்கை 2012ம் ஆண்டில் நடத்துவதற்கென, 2010 மற்றும் 2011ம்
ஆண்டுகளில் தயாரிப்பு கூட்டம் நடத்துவதற்கு, அரசுகள் ஐ.நா.வில் கடந்த மாதம் முப்பதாம்
தேதி ஒத்துக் கொண்டதையும் அவ்வறிக்கைக் குறிப்பிட்டுள்ளது. இந்த 2012ம் ஆண்டின் உலகக்
கருத்தரங்கில் சர்வதேச ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் கொண்டுவரப்படும் என்ற தங்கள் நம்பிக்கையையும்
அந்நாடுகள் தெரிவித்துள்ளன. தற்சமயம், உலகில் ஆயுதங்கள், சட்டத்துக்குப் புறம்பேயான
ஆயுதச் சந்தைகள், சர்வதேச ஆயுதத்தடை மீறப்படுதல் போன்றவற்றினால் அவை கட்டுப்பாடின்றி
பரவி வருகின்றன என்றும், இந்த ஆயுதங்களால் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வரைக் கொல்லப்படுகின்றனர்
என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.இவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலானோர் மிக ஏழை நாடுகளைச்
சேர்ந்த பெண்களும் சிறாரும் என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.