2009-11-10 16:39:39

விவிலியத் தேடல்:


குணமாக்கும் புதுமைகளில் பலவற்றை இயேசு ஒய்வு நாட்களில் நிகழ்த்தினார். லூக்கா நற்செய்தி கூறும் இயேசுவின் புதுமைகளில் மூன்றில் ஒரு பகுதி ஓய்வு நாட்களில் செய்யப்பட்டவை.  இயேசு ஆற்றியதாக லூக்கா  கூறும்  முதல் புதுமையே ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் நடந்தது. ஓய்வு நாளை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும் இறைவன் சந்நிதியில், தொழுகைக் கூடத்தில் மீறுவது அதைவிட பெரும் பிரச்சனை. இயேசு ஏன் இப்படி செய்தார். பிரச்சனைகளைத் தேடி சென்றாரா? மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி தோன்றலாம். ஆனால் இன்னும் ஆழமாய்த் தேடினால், இயேசு இவற்றை ஒரு தீர்மானத்தோடு செய்வது விளங்கும். புதுமைகளால் தனி ஒருவர் மட்டும் பயன் பெறவேண்டும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில் புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது தேவையுள்ளவர் வீடு தேடி சென்று புதுமைகள் செய்திருக்கலாம். இவை போன்ற புதுமைகளும் சொல்லப் பட்டுள்ளன. ஆனால், ஓய்வு நாள், தொழுகைக் கூட புதுமைகளில் இயேசுவின் எண்ணங்கள் வேறு வகையில் இருந்ததால், பிரச்சனைகளுக்கு மத்தியில், கேள்விகளுக்கு மத்தியில் புதுமைகளை ஆற்றுகிறார். யூதர்களுக்கும், யூத மதத் தலைவர்களுக்கும் ஒய்வு நாள் குறித்த பாடங்களைச் சொல்லித்தருவது இயேசுவின் தலையாயக் குறிக்கோளாகத் தெரிகிறது. நாமும் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. லூக்கா நற்செய்தி ஆறாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் ஆற்றும் ஒரு புதுமையில் இயேசு பிரச்சனையைச் சந்திக்கிறார். சந்திக்கிறார் என்பதை விட, பிரச்சனையை ஆரம்பிக்கிறார் என்பது அதிகம் பொருந்தும். இப்படி பிரச்சனையின் மத்தியில் இயேசு ஆற்றும் புதுமையை லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா நற்செய்தி 6 6-11
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
கோவில், தொழுகைக் கூடம் செல்வதற்குப் பல காரணங்கள். அவைகளைப் பட்டியலிட இப்போது நேரமில்லை. நாம் வாசித்த நற்செய்தியில் தொழுகைக் கூடத்தில் இருந்தவர்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம். இயேசு தொழுகைக் கூடத்தில் இருந்தார். காரணம்? மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல. மக்கள் அங்கு வரக் காரணம்? இயேசுவின் போதனைகள் மற்ற மறை நூல் அறிஞர்கள் போதிப்பது போல் இல்லாமல், நன்றாக இருப்பதாக செய்தி பரவி வந்ததால், அவரது போதனையைக் கேட்க வந்திருந்தனர்.
போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் வலக்கை சூம்பிய ஒருவர் இருந்தார். ஒரு வேளை, யேசுவிடம் தன் குறையைச் சொல்லி ஏதாவது ஒரு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையோடு வந்திருப்பார்.  ஓய்வு நாளில் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் தொழுகைக் கூடத்தில் இருந்தனர். காரணம்? இயேசுவின் போதனைகளைக் கேட்கவா? ஜெபம் செய்யவா? அல்லது மக்களை ஜெபத்திலும், தொழுகையிலும் வழிநடத்தவா? அல்லது மக்களைத் திசைதிருப்பவா?
ஒருவேளை இவைகளுக்காக அங்கு வந்திருக்கலாம். ஆனால், இயேசுவை அந்த தொழுகைக்கூடத்தில் பார்த்ததும், இயேசுவுக்கு முன்னால் குறையுள்ள அந்த மனிதரைப் பார்த்ததும் அவர்கள் வந்த காரணம், குறிக்கோள் எல்லாம் மாறியது. அவர்கள் உதட்டோரம் லேசான ஒரு புன்னகை. இயேசுவை மக்கள் முன் மட்டம் தட்ட இதைவிட அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டனர்.
கை சூம்பிய அந்த மனிதருக்கு இயேசு உதவாவிடில், அவர் இதயமற்றவர் ஆகிவிடுவார். ஆனால், அந்த மனிதர் மேல் இரக்கம் காட்டி, அவரை குணமாக்கினால் மோசே வகுத்த சட்டங்களை, ஆண்டவனே தந்த ஓய்வு நாள் சட்டத்தை மீறுபவர் ஆகிவிடுவார். நல்லது செய்தாலும் தப்பு, செய்யாமல் இருப்பதும் தப்பு. இயேசு இன்னைக்கி நல்லா மாட்டிகிட்டார். அவர்கள் போட்ட கணக்கில் ஒரே ஒரு தப்பு... இயேசுவின் அறிவுத்திறனைக் கொஞ்சம் குறைவாக மதிப்பிட்டுவிட்டனர். நற்செய்தி சொல்லும் அழகான ஒரு சொற்றொடர்: "அவர்கள் எண்ணங்களை அறிந்த இயேசு..." நமது இன்றைய பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், இயேசு “அவங்களை அளந்து வெச்சிருந்தார்”.
ஒரு கற்பனைக் காட்சியை காண்பதற்கு உங்களை அழைக்கிறேன். இயேசுவைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் வருவது போலவும் இந்த காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். இயேசு போதித்துக் கொண்டிருப்பார், அவரைச் சுற்றி எளிய மக்கள் அமர்ந்திருப்பர். எல்லாருடைய முகத்திலும் ஒரு வித அமைதி, ஆவல் காட்டப்படும். சூம்பியக் கை உள்ளவரும் அவ்வப்போது காட்டப்படுவார். மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும். திடீரென, இசை மாறும். காமெரா ஒரு பகுதியைக் காட்டும். அங்கு பரிசேயர், மறைநூல் வல்லுநர் வந்து நின்று கொண்டிருப்பர். மக்கள் முகங்களில் ஒரு வித கலக்கம் தெரியும். இது வரை அங்கு இருந்த சகஜமானச் சூழ்நிலை மாறி ஒரு இறுக்கமானச் சூழல் உருவாகும்.
வாழ்க்கையில் இதை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம். நல்லதொரு சூழலில் நண்பர்களுடன் நாம் பேசி, சிரித்துக்கொண்டிருக்கும் நமக்குப் பிடிக்காத ஒருவர் அந்தப் பக்கம் வந்தால், அந்த சூழ்நிலையே மாறிவிடும். அன்போடு ஆனந்தமாய் இருந்த சூழல் மாறி, ஒரு வித அமைதி, இறுக்கமான அமைதி அங்கு குடிகொள்ளும். தொழுகைக் கூடத்தில் நிலவிய இறுக்கத்தைக் குறைக்க அல்லது உடைக்க இயேசு முன்வருகிறார். சூம்பிய கையுடையவரிடம், "எழுந்து நடுவே நில்லும்." என்கிறார். சங்கடமான ஒரு சுழ்நிலை.
உடல் ஊனமுற்றவர்களை கூர்ந்து பார்ப்பதே அநாகரிகமானச் செயல் என்று இக்காலத்தில் நமக்குப் பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. அவர்களது ஊனத்தைப் பெரிது படுத்தாமல், அவர்களை முடிந்தவரை சகஜமான வாழ்க்கையில் ஈடுபடுத்த அனைவரும் முயல வேண்டும் என்பது குழந்தைகளுக்கும் இன்று பள்ளிகளில் சொல்லித்தரப்படும் ஒரு பாடம். இப்பாடங்களை எல்லாம் நாம் பின்பற்றுகிறோமா என்பதைச் சிந்திக்கலாம். இயேசுவிடம் வருவோம்.
உடல் நோய் உள்ளவர்களை, குறை உள்ளவர்களை மதிக்காத யூத சமூகத்தில், இயேசு உடல் குறை உள்ள ஒருவரை ஏன் கூட்டத்தின் நடுவில் வந்து நிற்கச் சொல்கிறார்? குறையுள்ளவர் மனமும், உடலும் அதிகம் பாடுபட்டிருக்கும். கூட்டத்தில் குணமானப் பெண்ணை, கூட்டத்தின் நடுவில் நிறுத்தி, அவர் வழியாகக் கூட்டத்தைக் குணமாக்கவில்லையா? அதேபோல் தான் இந்த நிகழ்விலும். அந்தப் பெண்ணாவது குணமான பின் கூட்டத்தின் மையத்திற்கு அழைக்கப்பட்டார். இவரோ? குறையோடு நிற்கிறார், கூட்டத்தின் நடுவில்.
குறையுள்ள அந்த மனிதரைப் பகடைக் காயாக்கி அவரை குணமாக்கினாலும், குமமாக்காவிட்டாலும் இயேசுவை எப்படியாவது மடக்கி விடலாம் என்று நினைத்த அந்த மதத் தலைவர்களின் திட்டங்களை நிலை குலையச் செய்வதற்கு இயேசு இந்த வழியைக் கடைபிடிக்கிறார். ஊனமுள்ள அந்த மனிதர் நின்றதும், அவரது குறையைக் கண்டதும், அங்கிருந்த எளிய மக்களின் மனதில் இரக்கம் அதிகம் பிறந்திருக்கும். "ஐயோ பாவம் இந்த மனுஷன். இவரைக் கட்டாயம் இயேசு குணப்படுத்துவார்..." என்று பரிதாபமும், நம்பிக்கையும் கலந்த மன நிலையில் அந்த மக்கள் அமர்ந்திருக்கின்றனர். இயேசுவின் கேள்வி அவர்களைத் தட்டி எழுப்புகிறது. இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.
இயேசு யாரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்? மக்களிடம் அல்ல. மக்களின் மனதில் ஓய்வுநாளைப் பற்றி நல்ல கருத்துக்களை உருவாக்கியிருப்பார்.
கேள்வி மதத்தலைவர்களுக்கு. பதில் எதையும் காணோம். ஓய்வு நாளை வைத்து இயேசுவை மடக்கிவிடலாம் என்று கணக்கு  போட்டுக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், தங்களிடமே இந்த கேள்வி எழுப்பப்படும் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள். வாயடைத்து நின்றார்கள். இயேசு நல்லது செய்கிறார். அவருடைய கை நலமடைந்தது. சூழ இருந்த எளியவர்களின் மனம் நலமடைந்தது. மனம் நிறைந்தது. அனால், அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
ஒரு மனிதர் நல்லது செய்யும் போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்து விட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கமும் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர் பக்கம் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே.  அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம்.







All the contents on this site are copyrighted ©.