கர்நாடகாவில்அரசுடன்இணைந்து நிவாரணப் பணிகளைச்செய்யஇயலாத நிலை
அக். 29, 2009. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெருமழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கர்நாடகாவின் ஐந்து மறைமாவட்டங்களில் அரசுடன் இணைந்து
நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறியிருந்த கர்நாடக தலத் திருச்சபை, அப்பணிகளைத் திருச்சபை
தனித்து தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளது. அரசுடன் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், இன்றைய
நிலையில் அரசு இப்பணிகளைச் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருப்பதாலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் நெருக்கடிகள்
இப்பணி நடக்க இடையூறுகள் விளைவிப்பதாலும் அரசுடன் சேர்ந்து இப்பணிகளைச் செய்ய இயலாத நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார், காரித்தாஸ் இந்தியா
அமைப்பின் ஆலோசகர் அருட்தந்தை பவுஸ்டின் லோபோ. (Faustine Lobo) கர்நாடகா பகுதிகளின் சமூகச்
சேவை அமைப்பு இந்தப் பணிகளை முன்னின்று நடத்துவதாகவும், சமுதாய சிந்தனை கொண்ட வேறு பல
அரசியல் சாரா அமைப்புகளுடன் சேர்ந்து இப்பணியைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் பெல்லாரி
மறைமாவட்ட ஆயர் ஹென்றி டி சூசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.