அப்போஸ்தலர்களான இவ்விரு புனிதர்களும் இயேசுவின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்று கிறிஸ்துவ
பாரம்பரியம் கருதி வருகிறது. புனித சீமோனைக் குறிப்பிடும் நற்செய்திகள் அவரைத் “தீவிரவாதியாக
இருந்த சீமோன்” என்று குறிப்பிடுகின்றன. ரோமைய அரசிடமிருந்து யூதேயாவைக் காப்பாற்ற உருவான
பல தீவிரவாதக் குழுக்கள் ஒன்றில் இவர் ஈடுபட்டு, பின்னர் இயேசுவின் சீடராக மாறியிருப்பார்
என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.யூதா ததேயூ, யாக்கோபின் சகோதரர்; எனவே
இயேசுவின் நெருங்கிய உறவினர். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாவுக்கும் இவருக்கும் ஒரே
பெயர் இருந்ததால், இவரிடம் யாரும் வேண்டுவதில்லை. ஆனால், வேறு ஒரு வழியும் இல்லாதபோது
இவர் வழியாக கேட்கப்படும் வேண்டுதல்கள் நிறைவேறுவதால், இவரிடம் முடியாத காரியங்களுக்காக
வேண்டுகின்ற வழக்கம் நிலவி வருகிறது.