2009-10-10 16:16:27

நோயாளிகள், தங்கள் துன்பங்களைக் குருக்களின் தூய்மையான வாழ்வுக்காக அர்ப்பணிக்க அழைப்பு


அக்.10,2009 நோயாளிகள், தங்கள் துன்பங்களைக் குருக்களின் தூய்மையான வாழ்வுக்காக அர்ப்பணிக்குமாறு திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோவ்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்

நோயாளிகள், துன்புறுவோர் மற்றும் அவர்கள் மத்தியில் சேவையாற்றும் குருக்களுக்கென சர்வதேச குருக்கள் ஆண்டை முன்னிட்டு கடிதம் அனுப்பிய பேராயர் சிமோவ்ஸ்கி இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச குருக்கள் ஆண்டு, 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இயேசுவின் திருஇதய திருவிழாவோடு நிறைவடையும், இதே ஆண்டில் திருப்பீட நலவாழ்வுத்துறையும் அது உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டை சிறப்பிக்கும் என்பதையும் பேராயர் சுட்டிக் காட்டியுள்ளார்.

திருவருளால் இடம் பெற்றுள்ள இந்த ஒற்றுமை காரணமாக, துன்புறும் அனைத்து நோயாளிகளும் தங்களது வேதனைகளைக் குருக்களின் தூய்மையான வாழ்வுக்காக ஒப்புக் கொடுக்குமாறு கேட்டுள்ள அவர், இதனால் குருக்கள் தங்களது மேய்ப்புப்பணியை மிகுந்த அர்ப்பணத்துடன் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச குருக்கள் ஆண்டில் விசுவாசிகள் குருக்களுக்காகச் செபிப்பதன் வழியாக பரிபூரண பலன்களை அடைய முடியும் என்றும் பேராயர் சிமோவ்ஸ்கி அதில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.