அக்.10,2009 இலங்கையில் தமிழ் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் கடந்த மே மாதத்தில்
முடிவுக்கு வந்து விட்டாலும், அந்நாட்டு இராணுவத்துக்கான செலவிற்கென கூடுதலாக இருபது
விழுக்காட்டு நிதியை ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றத்தில்
அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இவ்வருடத்தின் மீதமிருக்கும் காலத்தின் இராணுவச் செலவிற்கு
மேலும் மூவாயிரத்து தொள்ளாயிரத்து அறுபது கோடி ரூபாய் தேவைப்படுகின்றதெனக் கூறியிருப்பதாக
ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியது.
இந்த நிதிக்கு நாடாளுமன்றம் தனது அங்கீகாரத்தை
வழங்கியதுடன், போர் முடிந்து ஐந்து மாதகாலம் முடிந்த பின்னரும், மேலும் ஒரு மாதத்துக்கு
அவசரகாலச் சட்டத்தை நீட்டித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த வருடத்தில்
என்றுமில்லாத வகையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 160 கோடி டாலர்க்கு மேலதிகமாக 30 கோடி டாலரை
அரசு ஒதுக்கியுள்ளது.
இராணுவத்தின் எரிபொருள் மற்றும் மருத்துவ விநியோகத்துக்கும்,
இறந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினருக்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்காகவும் இந்தக் கூடுதல்
நிதி பயன்படுத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது.