அக்.09,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுக்கு இவ்வாண்டுக்கான
நொபெல் அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நல்லுறவுகளையும்
மக்கள் மத்தியில் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு ஒபாமா எடுத்து வரும் அசாதாரண முயற்சிகளைப்
பாராட்டும் விதமாக இவ்விருதை அவருக்கு வழங்குவதாக நொபெல் அமைதி விருது வழங்கும் குழு
அறிவித்துள்ளது.
உலகிலே மிக மதிப்புமிக்க இந்த நொபெல் அமைதி விருது ஒரு தங்கப்பதக்கத்தையும்
ஒரு சான்றிதழையும் 14 இலட்சம் டாலரையும் உள்ளடக்கியது.
2009ம் ஆண்டின் இவ்விருதுக்கு
205 பேர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த வேளை ஐந்து பேர் கொண்ட இவ்விருது வழங்கும் குழு
ஒபாமாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
உலகை வழிநடத்துவோர், உலகின் பெருவாரியான மக்கள்
பகிர்ந்து கொள்ளும் விழுமியங்கள் மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டுமென்ற
கொள்கையை ஒபாமா கொண்டிருக்கிறார் என்று இக்குழு கூறியுள்ளது.