கொழும்புவில் வாழும் கத்தோலிக்கர்கள் மடு மாதாதிருத்தலத்திற்கு உருவச்
சிலைகளை அனுப்பியுள்ளனர்
அக். 07, 2009 கொழும்புவில் வாழும் கத்தோலிக்கர்கள் இலங்கையின் வட பகுதியில் உள்ள மடு
மாதா திருத்தலத்திற்கு சிலுவைப் பாதையை விவரிக்கும் 43 உருவச் சிலைகளை அனுப்பியுள்ளனர். கொழும்புவிலிருந்து இந்த
உருவச் சிலைகளைத் தாங்கிய வாகனங்கள் கடந்த ஒரு வாரமாய் இலங்கையின் பல்வேறு நகரங்கள் வழியாக ஊர்வலமாய் எடுத்து
வரப்பட்டு அண்மையில் மரியன்னையின் திருத்தலத்தை அடைந்தது. இலங்கையின் தெற்கு பகுதியில்
வாழ்பவர்களிடமிருந்து வரும் இந்த உதவியைப் பெரிதும் வரவேற்பதாக மன்னார் மறைமாவட்ட முதன்மை
குரு அருட் தந்தை அந்தோணி விக்டர் சூசை தெரிவித்தார். 400 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் பக்தர்கள் திருப்பயணமாய் வந்து
போன இத்திருத் தலம் போர் காலங்களில் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்ததாகவும், அண்மையில்
மீண்டும் திருப்பயணிகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் செய்திக்குறிப்பு கூறுகின்றது.