இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு
பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு
முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.'எழுபத்திரண்டு' என்னும் சொல் சில முக்கிய கையெழுத்துப்
படிகளில் 'எழுபது' என உள்ளது. அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ' அறுவடை மிகுதி;
வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின்
உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல்
உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச்
செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள்
சென்றாலும், ' இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! ' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர்
அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது
உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே
தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.
அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச்
சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,
' எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி
நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள் ' எனச் சொல்லுங்கள். அந்த நாளில்
அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச்
சொல்கிறேன்.