பெண்கள் அரசியலில் ஈடுபட முயற்சிகள் - கேரளா கத்தோலிக்க திருச்சபை.
செப். 17, 2009. அரசியலில் பெண்கள் இன்னும் அதிகமாய் ஈடுபடவும், அவர்கள் அரசியல் மூலம்
தங்கள் சக்தியை இன்னும் மேம்படுத்தவும் கேரளாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
வருகிற 2010 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெறவிருக்கும்
தேர்தலில் பெண்கள் இன்னும் அதிக பங்கேற்க முயற்சிகள் எடுத்துவரப்படுகின்றன என்று கேரள
கத்தோலிக்க ஆயர்களின் பெண்கள் பணிக்குழுவின் செயலர் பீனா செபாஸ்டின் கூறினார்.
கேரள
திருச்சபையின் பல்வேறு பணிக்குழுக்களின் உறுப்பினர்களில் 33 விழுக்காடு பெண்கள் இடம்
பெறவேண்டும் என கேரள ஆயர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள பாலினம் குறித்த கொள்கையில் (gender
policy) வெளியிடப்பட்டுள்ளது.
அரசு சார்ந்த பணிக்குழுக்களில் 50 விழுக்காடு பெண்கள்
இடம் பெற வேண்டும் என்ற மசோதா கேரள மாநிலங்களவையில் செப் 16 நிறைவேற்றப்படும் என்று செய்திக்குறிப்பு
ஒன்று கூறுகிறது. இந்தியாவில் பொதுவாக 54 விழுக்காடு பெண்கள் படிப்பறிவு உள்ளவர்கள்,
ஆனால், கேரளாவில் இந்த விழுக்காடு 88 ஆக உள்ளது எனக் கூறிய செபாஸ்டின், இந்த சூழ்நிலைகளைப்
பயன்படுத்தி, பெண்களின் நிலையை இன்னும் உயர்த்த வேண்டும் என்று கூறினார்.