2009-09-12 16:13:36

உலகின் வளர்ச்சிக்கு எழுத்தறிவின்மை முக்கிய தடையாக இருக்கின்றது, திருத்தந்தை


செப்.12,2009. உலகின் வளர்ச்சிக்கு எழுத்தறிவின்மை முக்கிய தடையாக இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

உலகின் முன்னேற்றத்திற்கு பசி, வறுமை, நோய் ஆகியவையும் தடைகளாய் இருக்கின்றன என்றுரைக்கும் அவர், எழுத்தறிவின்மை முக்கிய தடையாக இருக்கின்றது என்று சொல்லி அதனை அகற்றுவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்குத் தமது ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரில் யுனெஸ்கோ இயக்குனர் கொய்கிரோ மட்சுராவுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு கல்வியறிவு மிகவும் இன்றியமையாதது என்று வலியுறுத்தும் அச்செய்தி, கல்வியறிவு பெறுவதால் ஒருவர் பொது வாழ்வில் மிகுந்த ஊக்கமுடன் செயல்படவும் சுய மதிப்புடன் வாழவும் உதவுகின்றது என்ற திருத்தந்தையின் கருத்து அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகில் வயது வந்தவர்களில் ஐவருக்கு ஒருவர் கல்வியறிவற்றவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.










All the contents on this site are copyrighted ©.