2009-09-04 16:16:42

முன்னாள் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் தேவை, மன்னார் ஆயர் 


செப்.03,2009 . இலங்கையின் வடக்கில் மறுவாழ்வு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழ் விடுதலைப் புலிகளுக்குச் சமய வழிபாடுகள் நடத்தப்படுவதற்கு அந்நாட்டு ஆயர் ஒருவர், இராணுவத் தளபதியிடம் அனுமதி கேட்டுள்ளார்.

வவுனியா பகுதியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி கமல் குணராட்டேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு, மறுவாழ்வு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஞாயிறு திருவழிபாடுகள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் விடுதலைப்புலிகள் அமைப்போடு சேர்ந்து போரிட்ட முன்னாள் படைவீரர்கள், கடந்த காலத் துன்பங்களை மறந்து புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் தேவை என்று ஆயர் ஜோசப் இப்பேச்சுவார்த்தையில் மிகவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆயரின் இவ்விண்ணப்பத்தைக் கருத்தில் கொள்வதாகக் கூறிய குணராட்டே, இராணுவ அதிகாரிகள் அனுமதித்தவுடன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கான மறுவாழ்வு திட்டங்களில் சமய வழிபாடுகளையும் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
மறுவாழ்வு முகாம்களில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் முன்னாள் தமிழ் விடுதலைப் புலிகள் இருப்பதாக இராணுவம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.