அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது : அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும்
என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர்
பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள்
ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை
எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.4 முன்மதியுடையோர்
தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே
அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.6 நள்ளிரவில், ' இதோ மணமகன் வருகிறார். அவரை
எதிர்கொள்ள வாருங்கள் ' என்ற உரத்த குரல் ஒலித்தது.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து
தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து,
' எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்
' என்றார்கள்.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய்
போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது
' என்றார்கள்.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார்.
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.11
பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ' ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றார்கள்.12
' அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது
' என்றார்.13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.