கடந்த சில வாரங்களில் ஈரான் அரசு இஸ்லாமிய மதத்திலிருந்து மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில்
சேர்ந்துள்ளவர்களை அதிகமாகத் துன்புறுத்தி வருகிறது. கடந்த மாத இறுதியிலும் , இம்மாதம்
7 மற்றும் 9 தேதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலரை சிறைப்படுத்தியுள்ளது ஈரான் அரசு . ஈரானில்
உள்ள எவின் சிறை கைதிகளை மிகவும் கொடுமைப் படுத்தக்கூடிய சிறைச்சாலை. இஸ்லாத்திலிருந்து
கிறிஸ்தவர்களாக மதம்மாறிய இரண்டு பெண்கள் துன்புறுத்தல்களைத் தாங்கிக்கொண்டு கிறிஸ்தவ
மதத்தை மறுதலிக்க மறுத்துவிட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன .
அமெரிக்காவின்
அகில உலக மதச் சுதந்திர மன்றம் ஈரான் நாட்டில் சிறுபான்மை மதத்தவரைக் கொடுமைப் படுத்தும்
போக்கு கவலை தருவதாகத் தெரிவித்துள்ளது. 6 கோடியே 60 லட்சம் மக்கள் வாழும் ஈரானில் 2
லட்சம் பேர் மட்டுமே கிறிஸ்தவர்கள் . ஈரானிய அரசு கிறிஸ்தவர்களை வேறுபடுத்தி ஒதுக்கி
வருவதாகவும் தெரிகிறது . கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிப்பதோ , இஸ்லாம் மதத்திலிருந்து மதம்
மாறுவதோ தடை செய்யப்பட்டுள்ளது .ஈரானிய அரசு கிறிஸ்தவர்களை சிறைப்படுத்துவதாகவும் கிறிஸ்தவ
ஆலயங்களை மூடச் சொல்வதாகவும் காம்பஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.