ஐ.நா.அமைதிப் படையில் பெண் காவல்துறை அலுவலகர்கள் இன்னும் அதிகமாகச் சேர்க்கப்பட அழைப்பு
ஆக.08,2009. ஆயுதம் தாங்கிய மோதல்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் ஓர் ஆயுதமாகப்
பயன்படுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவுவதற்குமென ஐ.நா.அமைதிப்
படையில் பெண் காவல்துறை அதிகாரிகள் இன்னும் அதிகமாகச் சேர்க்கப்படுமாறு ஐ.நா.வின் காவல்துறை
ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
பாலியல் அடிப்படையில் இடம் பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கும்
பெண்கள் சக்தியை மேம்படுத்தவுமென ஐ.நா.வின் எல்லா மட்டங்களிலும் பெண் காவல்துறை அலுவலகர்கள்
சமஅளவில் நியமிக்கப்படுமாறு கேட்டிருப்பதாக ஐ.நா.வின் காவல்துறை அமைப்பின் உதவி ஆலோசகர்
ஆன்மரி ஓர்லெர் தெரிவித்தார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1996ம் ஆண்டிலிருந்து
குறைந்தது இரண்டு இலட்சம் பாலியல் வன்முறைப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று
ஐ.நா.பொதுச் செயலரின் அண்மை அறிக்கை கூறுகிறது.
தற்போது உலகில் ஐ.நா.வின் 17
அமைதி காக்கும் பணியிடங்களில் வேலையிலுள்ள 11 ஆயிரம் காவல்துறையினருள் 8 விழுக்காட்டினர்
பெண்கள்.