2009-08-07 20:51:26

வழிபாட்டு ஆண்டின் 19 ஆம் ஞாயிறு . மறையுரை .090809.


சாதி இரண்டொழிய வேறில்லை எனக் கூறி இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர் என்றார் . கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றவர் . அவரைப் பல்லாண்டு வாழவைப்பதற்காக அதியமான் என்ற மன்னவர் உச்சிமலை நெல்லிக்கனியைத் தேடிச்சென்றார் . அதை உண்பவர் என்றுமே வாழ்வார் என மன்னர் நம்பினார் . ஆனால் அவர் கனவு நனவாகவில்லை .

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபிறகு அந்நாட்டில் உள்ள ஒரு அற்புதமான நீரூற்றின் நீரைப் பருகினால் பருகியவர் சாவதில்லை என்ற கதையைக் கேட்டார். அதை நம்பினார் வேறொரு சாதனையாளர் .

பயணம் மேற்கொண்டார் இஸ்பானியக் கப்பல் பயணி போன்சி டி லியோன் . ஆனால் அவர் அந்த நீரூற்றைக் கண்டு பிடிக்கவில்லை .

கொக்கூன் என்பது ஒரு ஆங்கிலத் திரைப்படம் . அதற்கு கூட்டுப்புழு என்பது பொருள் . அதில் உள்ள முதியோர் வேறொரு கிரகத்துக்குச் சென்றால் இளமை ஊஞ்சலாடும் என்று நம்பி வேறொரு கிரகத்துக்குப் பயணமாவது பற்றியது கதை .

சீனச் சுவரைக் கட்டியெழுப்பிய மன்னன் சின் என்பவருக்கும் நிறைவேறாத ஓர் ஆசை . 2000 மைல் நீளமுள்ள சீனச் சுவரைக் கட்டிமுடித்த அவரைச் சாவு அச்சுறுத்த ஆரம்பித்தது .அவருடைய மந்திரவாதிகள் கிழக்கே கடற்பகுதியில் சொர்க்கலோகத் தீவு இருப்பதாகக் கூறி அவர்களிடம் உள்ள ரகசியத்தைப் பெற்றுவர விலைமதிப்பில்லாத பொருட்களைக் கொடுக்க வேண்டும் எனக் கூறினர் . அவ்வாறே சின் செய்தார் . ஆனால் ரகசியம் வந்தபாடில்லை . தீவிலிருந்தவர்கள் ரகசியத்தைத் தர மறுத்துவிட்டதாகக் கதை கூறுகிறது . வானவர்கள் அமிர்தத்தை அமிழ்தை உண்டு உயிர் வாழ்வதாகக் கதையும் உண்டு .

இந்தக் கதைகள் நமக்குக் கூறுவதென்ன . சொல்ல வரும் கருத்துத்தான் என்ன .

தொடக்கக் காலத்திலிருந்து மக்கள் சாகாவரத்தைத் தேடி இருக்கிறார்கள் . முடிவில்லாத காலத்துக்கும் வாழ ஆசித்திருக்கிறார்கள் . முடிவில்லாத வாழ்வை மறுவீட்டைப் பற்றி எண்ணியிருந்திருக்கிறார்கள் . மேலுலகம் பற்றி இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கவிதை வரைந்த வள்ளுவர் பல குறள்களில் எழுதியிருக்கிறார் .

நாம் அன்பு செய்த ஒருவர் காலமாகும்போது சாவு நிரந்தரம் என்பதும் சாகவரம் கிட்டாத கனி என்பதும் உறுதியாகிக் கொண்டிருக்கிறது .

எனவே கிறிஸ்து நாதர் பாலஸ்தீனத்தில் முடிவில்லாத வாழ்வைப் பற்றிப்பேசத் தொடங்கியதும் மக்கள் கவனமாக அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார்கள் . யூ.தர்கள் மிக ஆர்வமாகக் கேட்டார்கள் . ஏனெனில் அவர்களுக்கு ஆபிரகாம் , மோசே போன்றவர்களுக்கு என்ன நடந்தது – அவர்கள் எங்குச் சென்றார்கள் – இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பன போன்ற முக்கியமான கேள்விகள் அவர்களைத் துளைத்துக் கொண்டிருந்தன .

இறந்தவர்கள் வாழும் உலகம் ஒன்று இருப்பதாக எண்ணினார்கள். எனவே இயேசுபிரான் மறுவாழ்வு பற்றிக் கூறியவை அவர்கள் பசிக்கு விருந்தளிப்பதாக இருந்தன .

-----------------



இன்றைய நற்செய்தியில் இயேசு மறுவாழ்வு பற்றிக் கூறுகிறார் . அவர் கூறும் முக்கியமான திருவாக்கியங்களைச் செவிமடுங்கள்.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் . எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் . அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் . என யோவான் அதிகாரம்

6 , 51 ல் கூறுகிறார் .

இந்த உலக வாழ்வோடு முடிவதில்லை நம் வாழ்வு என இயேசு கற்பிக்கிறார். வேறொரு வாழ்வு நமக்குக் காத்திருக்கிறது . அது முடிவில்லாதது .



இவ்வாறு இயேசு கூறியதும் பல யூதர்கள் அதை நம்ப மறுத்து முணுமுணுத்தார்கள் . விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த உணவு நானே என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள் . இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா . இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா . அப்படியிருக்க நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் என இவர் எப்படிச் சொல்லலாம் என்று பேசிக் கொண்டார்கள் .



இயேசு சிலுவைச் சாவுக்குப் பிறகு உயிர்த்தெழுந்த பிறகு அவருடைய வார்த்தைகளை மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார்கள் .



நாம் இன்று வானொலியில் இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோம் . இயேசுவின் திருவுடல் ஆலயத்தில் பரிமாறப்படுகிறது .

கப்பல் பயணி போன்சி டி லியோன் அமெரிக்காவில் சாகாவரம் தரும் நீருற்றைத் தேடினார் . சீனர் பேரரசர் சின் சாகாவரம் தரும் ரகசியத்தைப் பெற எவ்வளவு பொருளையும் கொடுக்கத் தயாரானார் . கூட்டுப்புழு திரைப்படத்தில் முதியவர்கள் வேறொரு கிரகத்துக்கே பயணமாகத் தயாரானார்கள் .

இயேசுக் கிறிஸ்து கடவுளின் திருமகன் , முடிவில்லாத வாழ்வைத் தரும் நீரூற்று , நம்மோடு இருக்கிறார் . அவர் நம்மோடு , வானொலியைக் கேட்கும் உங்கள் ஒவ்வொருவரோடும் இயேசு உடன் இருக்கிறார் .

மத்தேயு நற்செய்தியில் அதிகாரம் 18, 20 ல் இயேசு கூறுகிறார் .

உங்களுள் இருவர் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார் .

இறைவாக்கில் இயேசு இருக்கிறார் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களுக்குக் கூறியதை இயேச நம்மிடமும் இப்போது கூறுகிறார்.

ஆலயத்தில் அருள்தந்தை வழியாக , குருவானவர் வழியாக அவர் பேசுகிறார் . உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார் என்கிறார் . இயேசு தேவ நற்கருணையிலிருக்கிறார் . வாழ்வு தரும் உணவு நானே . இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்கிறார் இயேசு .

லூக்கா நற்செய்தி அதிகாரம் 10 , வசனம் 23 ல் நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர் . ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள் . ஆனால் அவர்கள் காணவில்லை . நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள் . ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறினார் .

நாம் அனைவரும் இணைந்து செபிப்போமா . இறைவா உம் திருமகனின் பிரசன்னத்தை எங்கள் சகோதர சகோதரிகளில் காண அருள்தாரும் .

உம் திருமகனின் குரலை நற்செய்தியின் இறைவாக்கில் கேட்கும் வரம் தாரும் . உம் திருமகனை அவர் வழங்கும் நற்கருணை உணவில் கண்டு ஏற்றுக்கொள்ளும் வரம் தாரும் . உம்மோடும் , உம் திருமகனோடும் , தூய ஆவியானவரோடும் முடிவில்லாத காலமும் வாழும் வரமருள்வீராக . ஆமென் .








All the contents on this site are copyrighted ©.