2009-08-01 14:54:21

இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை


ஆக.,01,2009. இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று இந்தியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனமான நவதானிய அறக்கட்டளை என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்தியா, உலகின் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இன்மையின் மையமாக மாறி வருவதாகக் கூறும் அவ்வறிக்கை, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில் இவ்வறிக்கையைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், இந்தியாவில் ஊட்டசத்து இல்லாமையால் 57 இலட்சம் குழந்தைகள் சராசரி எடையை விட குறைவான எடையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டில் உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதாகவும், விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களை வேறுபயன்பாடுகளுக்குக் கொடுத்து வருவதும் இப்பிரச்சனைக்கு ஒரு காரணமாக இந்நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.

எனினும் இந்தியாவில் மக்கள் தொகை ஆண்டுக்கு ஒரு கோடியே 80 இலட்சமாக அதிகரிக்கும் அதே நேரத்தில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.