2009-07-18 15:47:47

திருத்தந்தையின் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கின்றது, திருப்பீடப் பேச்சாளர்


ஜூலை18,2009. இவ்வெள்ளி காலை வலதுகை மணிக்கட்டில் இலேசான எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வெள்ளி மாலை நான்கு மணியளவில் அவர் தங்கியிருக்கும் இல்லம் திரும்பினார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.

இச்சனிக்கிழமை காலை திருப்பலி நிகழ்த்தி காலை உணவை முடித்த திருத்தந்தையின், உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் இரவில் அமைதியாக உறங்கினார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.

திருத்தந்தையின் வலதுகை மணிக்கட்டில் ஏற்பட்ட இலேசான எலும்பு முறிவு நரம்புநூல்களால் தைக்கப்பட்டுள்ளது, அதற்கு மாவுகட்டும் போடப்பட்டுள்ளதால் இடது கையைப் பயன்படுத்துகிறார் என்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி அவரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளி காலை திருப்பலி நிகழ்த்தி காலை உணவை முடித்த பின்னரே அன்று 9.45 மணிக்கு அவுஸ்தாவிலுள்ள உம்பெர்த்தோ பரினி மருத்துவமனை சென்றார் திருத்தந்தை.

வடஇத்தாலியில் ஆல்பஸ் மலைப் பகுதியிலுள்ள லெ கோம்ப்ஸ் என்ற ஊரில் சலேசிய சபையினரின் இல்லத்திற்குக் கோடை விடுமுறைக்காக இம்மாதம் 13ம் தேதி சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.



 








All the contents on this site are copyrighted ©.