வளரும் நாடுகளுக்குச் சர்வதேச உதவிகள் தொடர்ந்து தேவைப்படுகின்றன, பேராயர் தொமாசி
ஜூலை10,2009 உலகு, தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர வேண்டுமெனில், வளரும்
நாடுகளுக்குச் சர்வதேச உதவிகள், குறிப்பாக அந்நாடுகளின் நலவாழ்வுக்கு உதவிகள் தொடர்ந்து
தேவைப்படுகின்றன என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
“தற்போதைய உலகளாவிய
மற்றும் தேசிய போக்குகளும், பொதுநலம் உட்பட சமூக வளர்ச்சி மீதான அவற்றின் தாக்கங்களும்”
என்ற தலைப்பில் ஐ.நா.வின் உயர்மட்ட பொருளாதார மற்றும் சமூக அவைக் கூட்டத்தில் இவ்வியாழனன்று
உரையாற்றிய பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், 5 கோடியே
30 இலட்சம் முதல் 6 கோடியே 50 இலட்சம் மக்கள் வரை மேலும் வறுமைக் கோட்டிற்குக்கீழ் தள்ளப்படுவர்
என்ற உலக வங்கியின் கணிப்பையும் குறிப்பிட்டார் பேராயர் தொமாசி.
பொதுநல வாழ்வு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 80 கோடிப் பேர் வாழ்வதையும் சுட்டிக் காட்டிய அவர், பொருளாதாரப்
பின்னடைவால் நலவாழ்வுக்கான சர்வதேச உதவிகள் குறைக்கப்பட்டால் நலவாழ்வால் பாதிக்கப்படும்
மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்.