2009-07-04 15:54:17

அருட்தந்தை பொர்கோமேயோவின் மறைவுக்கு திருத்தந்தை அனுதாபம்


ஜூலை04,2009 வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர் இயேசுசபை அருட்தந்தை பாஸ்குவாலே பொர்கோமேயோ இறைபதம் அடைந்ததை முன்னிட்டு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இயேசு சபை அதிபர் அருட்தந்தை அடோல்போ நிக்கோலாசுக்கு அனுப்பியுள்ள இத்தந்தி செய்தியில், இயேசு சபையினருக்கும், இறந்த அருட்தந்தை பொர்கோமேயோவின் குடும்பத்தினருக்கும் திருத்தந்தையின் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை பொர்கோமேயோ, திருப்பீடத்தில், சிறப்பாக, வத்திக்கான் வானொலியில் பல ஆண்டுகள் விசுவாசமான உடன்உழைப்பாளராகப் பணியாற்றியதற்குத் திருத்தந்தையின் பாராட்டும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இச்சனிக்கிழமை இடம் பெற்ற அருட்தந்தை பொர்கோமேயோவின் அடக்கச்சடங்கு திருப்பலியில் மறையுரையாற்றிய வத்திக்கான் வானொலியின் இன்னாள் இயக்குனர் இயேசுசபை அருட்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி, ஊடகத்துறை மனிதரான அருட்தந்தை பொர்கோமேயோவின் வாழ்வில் மிளிர்ந்த ஆன்மீகத்தைப் பெரிதும் புகழ்ந்து பேசினார்.

அவரின் எழுபத்தாறு வருட இவ்வுலக வாழ்க்கையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயேசு சபை யிலும் அவற்றில் முப்பந்தைந்து ஆண்டுகள் வத்திக்கான் வானொலியிலும் பணியாற்றியதைக் குறிப்பிட்ட அருட்தந்தை Lombardi, அவர் வானொலிப் பணியை நிறைவு செய்த பொழுது வியப்பும் நன்றியும் அவரிடம் ஆழமாக வெளிப்பட்டன என்றும் பாராட்டினார்.

அருட்தந்தை பாஸ்குவாலே பொர்கோமேயோவுக்கு முந்திய வத்திக்கான் வானொலியின் இயக்குனர் இயேசு சபை கர்தினால் ராபெர்த்தோ துச்சி தலைமை தாங்கி நடத்திய இத்திருப்பலியில் வத்திக்கான் வானொலியின் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 








All the contents on this site are copyrighted ©.