2009-07-03 15:52:24

உலகில் இன்னும் அதிக மக்களுக்கு அடிப்படை பொருளாதாரப் பாதுகாப்புக்கு உறுதி வழங்கும் திட்டங்கள் குறித்து திருத்தந்தையுடன் பேச ஒபாமா திட்டம்


ஜூலை03,2009 உலகில் இன்னும் அதிக மக்களுக்கு அடிப்படை பொருளாதாரப் பாதுகாப்புக்கு உறுதி வழங்கும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் உள்நாட்டு கொள்கைகளில் முக்கிய சீர்திருத்தங்களைத் தொடங்குவது குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்டுடன் தான் பேசவிருப்பதாகக் கூறினார் அதிபர் பாரக் ஒபாமா.

ஜி8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு இத்தாலி வரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் ஒபாமா இம்மாதம் 10ம் தேதி திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து சமயச் செய்தி நிருபர்களிடம் பேசிய போது இவ்வாறு அறிவித்தார்.

கடந்த ஏப்ரலில் இலண்டனில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலகின் முக்கிய அரசுகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானங்கள் பற்றியும் திருத்தந்தையிடம் விளக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

ஏழைகள் பற்றி மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் மாண்புடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உறுதி வழங்கும் செயல்பாடுகள் பற்றியும் திருத்தந்தையிடம் தான் பேசவிருப்பதாகக் கூறினார் அதிபர் ஒபாமா.

ஜி8 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு இத்தாலியின் லாக்குய்லாவில் இம்மாதம் 8 முதல் 10 வரை நடைபெறுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.