2009-06-20 15:03:16

உலகில் இவ்வாண்டில் 102 கோடிப் பேர் பசியால் வாடும் அபாயத்தை எதிர்நோக்கக்கூடும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்


சூன்20,2009. உலகில் இவ்வாண்டில் 102 கோடிப் பேர் அதாவது உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் பசியால் வாடும் அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்று எப் ஏ ஒ எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கவலை தெரிவித்தது.

தற்போதைய உலகளாவிய பொருளாதார மந்தநிலை, உணவுப் பொருட்களின் விலையேற்றம் இவையிரண்டும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் பத்து கோடிக்கு அதிகமானோரை கடும் வறுமைக்கும் பசிக்கும் உள்ளாக்கியுள்ளன என்று இந்த ஐ.நா. நிறுவன இயக்குனர் ஜாக் தியோப் கூறினார்.

இந்நிலையை மௌனமான பசி நெருக்கடி என்று குறிப்பிட்டுள்ள அவர், இது உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றார்.

2006 முதல் 2008ம் ஆண்டு வரை ஏற்பட்ட உணவு மற்றும் எரிபொருள் பிரச்சனைகளினால் இடம் பெற்ற உணவுப் பொருட்களின் விலையேற்றம் வளரும் நாடுகளில் இன்னும் தாக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் எப் ஏ ஒ இயக்குனர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.