11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12
அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார்.
அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய
மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத்
தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார்.
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15
எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி
மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால்
தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17
அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு
இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம்
போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல்
நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்
கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம்
தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு
கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், '
அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன்
எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான
ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும்
அணிவியுங்கள்;23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து
விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும்
உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார்.
அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்