வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க தென் கொரிய கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்
மே30,2009. வட கொரியா அணுப்பரிசோதனை நடத்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை,
தென் கொரியா, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளனர் தென்
கொரிய கிறிஸ்தவத் தலைவர்கள்.
இந்த அணுப்பரிசோதனை வட கொரியா மீது காழ்ப்புணர்வை
உருவாக்கியுள்ளது என்பதால் விசுவாசிகள் இத்தகைய வெறுப்புணர்வுக்கு தங்களை உட்படுத்தாமல்
இருப்பதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை உதவ வேண்டும் என்று கொரிய ஆயர் பேரவையின் ஒப்புரவு
ஆணையச் செயலர் அருட்திரு செயோ ஜோங் யோப் கூறினார்.
இரண்டு கொரிய நாடுகளுக்கும்
இடையே ஒப்புரவு ஏற்படுவதை இந்த அணுப்பரிசோதனை நடவடிக்கை கடினமாக்கியுள்ளது என்றும் அக்குரு
கூறினார்.
வட கொரிய கம்யூனிச அரசு முதலில் 2006ம் ஆண்டில் நடத்திய அணுப்பரிசோதனையைவிட
இம்மாதத்தில் நடத்தியுள்ள அணுப்பரிசோதனை மிகவும் வீரியம் நிறைந்தது என்று சொல்லப்படுகின்றது.
மேலும்,
வடகொரியாவின் இந்நடவடிக்கையையொட்டி அந்நாட்டிற்கெதிரான தடைகளை விதிப்பதற்குச் சிந்தித்து
வருகிறது ஐ.நா.பாதுகாப்பு அவை.