முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதராக அறிவிக்கப்பட வேண்டும், மிகேல் கோர்பஷேவ்
மே26,2009. முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதராக அறிவிக்கப்பட வேண்டும்
என்பதில் தான் உறுதியாக நம்புவதாக இரஷ்ய முன்னாள் அதிபர் மிகேல் கோர்பஷேவ் அறிவித்தார்.
திருத்தந்தை
இரண்டாம் ஜான் பவுலுடன் தான் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்பு கிட்டியதால் அவரின் கருத்துக்கள்
அனைத்தும் எப்போதும் சரியாக இருந்ததாகவே கண்டதாகவும் அவர் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவர்
என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார் கோர்பஷேவ்.
உலகின் புதிய அமைப்பு முறைகள்
அனைத்தும் உறுதியானதாய் தொலைநோக்குடையதாய், நீதியானதாய், மனிதாபிமானம் நிறைந்ததாய் இருக்க
வேண்டும் என்பதை திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததாயும்
இரஷ்ய முன்னாள் அதிபர் கூறினார்.
மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதராக
அறிவிக்கப்படுவதற்குத் தன் முழு ஆதரவையும் அளித்து முதல் நபராக இருக்க விரும்புவதாகவும்
தெரிவித்தார் மிகேல் கோர்பஷேவ்.