குவாத்தமாலாவில் அப்பாவி பொது மக்கள் ஆயுதக் கும்பலால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது
நிறுத்தப்பட வேண்டும், தலத்திருச்சபை
மே22,2009. குவாத்தமாலாவில் அப்பாவி பொது மக்கள் ஆயுதக் கும்பலால் தொடர்ந்து கொல்லப்பட்டு
வருவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இத்தகைய குற்றங்களைச் செய்வோர் தண்டிக்கப்படாமல்
விடப்படக் கூடாது என்று அந்நாட்டு அரசை கேட்டுள்ளது
அந்நாட்டுத் தலத்திருச்சபை.
அமலமரி
தியாகிகள் சபை மறைபோதகர் அருட்திரு லொரென்சோ ரோஸ்பாஹ் இத்திங்களன்று முகமூடியணிந்த துப்பாக்கி
மனிதர்களால் கொல்லப்பட்டதையொட்டி பேசிய குரு ஹோசே மானுவேல் சந்தியாகு இவ்வாறு அரசை வலியுறுத்தினார்.
இக்குருவின்
கொலை குறித்து புலன் விசாரணை நடத்தப்படுமாறு கேட்டுள்ள அக்குரு, இவர் குருவானவர் என்பதற்காகக்
கேட்கவில்லை, மாறாக மக்கள் இவ்வாறு துப்பாக்கி மனிதர்களின் கையில் தொடர்ந்து இறந்து கொண்டிருப்பதை
அனுமதிக்க முடியாது என்பதால் இவ்வேண்டுகோளை முன்வைப்பதாகக் கூறினார்.
மத்திய அமெரிக்காவில்
அதிக மக்கள் தொகையைக் கொண்ட குவாத்தமாலாவின் ஏறத்தாழ ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேரில்
பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாழ்கின்றனர். ஆண்டுக்கு ஐயாயிரத்துக்கு அதிகமானோர்
கொல்லப்படுகின்றனர்.