மே06,2009. இப்புதன் மறைபோதகத்தைச் செவிமடுக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பயணிகள் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் குழுமியிருக்க,
கீழைரீதி இறையியல் வரலாற்றின் முக்கிய தூணாகிய புனித ஜான் தமசேன் குறித்துத் தன் கருத்துக்களை
வழங்கினார் திருத்தந்த ை 16ம் பெனடிக்ட்.
புனித
ஜான் தமசேன் அரபு ஆட்சியின் கீழிருந்த சிரியாவில் ஒரு பணக்கார கிறிஸ்தவக் குடும்பத்தில்
பிறந்தவர். இவர் துறவுமட வாழ்க்கையை தேர்ந்து கொள்வதற்காக அரசுப்பணியைத் துறந்தார். உருவவழிபாட்டை
எதிர்ப்பதாகக்கூறி திருஉருவச் சிலைகளை உடைப்பவர்களுக்கு எதிராக புனித ஜான் தமசேன் ஆற்றிய
உரைகள், திருஉருவச் சிலைகள் வணங்கப்படுவது குறித்த இறையியல் ரீதியானப் புரிந்து கொள்ளலுக்கு
உதவுகின்றன. இறைவனுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வழிபாடு, வணக்கம் ஆகியவைகளுக்கும், திருவுருவச்சிலையில்
காணப்படும் நபரைக் குறித்துத் தியானிப்பதற்கு உதவும் வண்ணம் அத்திருவுருவச்சிலையை வணங்குவதற்கும்
இடையேயான வேறுபாட்டைத் தெளிவாக முதன்முதலில் விளக்கியவர்களுள் புனித ஜான் தமசேனும் ஒருவர்.
பழைய ஏற்பாட்டில் இறைவனின் திருவுருவச்சிலைகள் வைக்கக் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது கடவுள் மனுவுருவெடுத்து கண்ணால் காணக்கூடியவராக மாறியதால் உருவங்களுக்கு
புதிய மாண்பு கிட்டியுள்ளது. சிலுவை மரம், நற்செய்தி நூல்கள், பலிபீடம் என எல்லாமே நம்
மீட்புக்கென கடவுளால் பயன்படுத்தப்பட்டவை. பருப்பொருள் அல்லது பொருட்கூறு என்பது இறைவனுடனான
நம் சந்திப்பின் அடையாளமாக, அருட்சாதனமாக இப்போது செயல்படுகிறது. நாம் அருட்சாதனங்களில்
பங்கேற்கும் போது, திருவுருவச்சிலைகளை வணங்கும்போது, அவைகளை தூயஆவியின் வல்லமையில் விசுவாசத்தின்
ஆற்றலால் அவையும் உண்மையில் அருட்கொடைகளின் வழியாகின்றன. மனிதன் பாவநிலையில் இருக்கின்ற
போதிலும் கடவுள் மனிதனுக்குள் குடியிருந்து அவனைப் புனிதமாக்கி அவரின் முடிவற்ற நன்மைத்தனம்
மற்றும் புனிதத்துவத்தின் பங்குதாரர்களாக்குகிறார். அவரை நாம் மகிழ்வோடு நம் இதயங்களுக்குள்
வரவேற்போம் என்றார் திருத்தந்தை.