யூதஇனப் படுகொலைகளின் போது யூதர்களைக் காப்பாற்றிய கத்தோலிக்கரை கௌரவிக்க முயற்சி
ஏப்.22,2009. யூதஇனப் படுகொலைகள் இடம் பெற்ற போது கத்தோலிக்கரால் காப்பாற்றப்பட்ட யூதர்களின்
சாட்சியங்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராவுல் வல்லன்பெர்க் என்ற சர்வதேச
அமைப்பு.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புனித பூமிக்கானத் திருப்பயணத்தை முன்னிட்டு
இம்முயற்சியில் இறங்கியுள்ள இச்சர்வதேச அமைப்பு, இரண்டாம் உலகப் போரின் போது நாதிசிகளால்
வதைக்கப்பட்ட யூதர்களைக் காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய கண்டத்தில் பெரும் எண்ணிக்கையில்
கத்தோலிக்கர் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து செயல்பட்டுள்ளனர் என்று கூறியது.
இக்கத்தோலிக்கரில்
மிகச்சிலரே இனம் காணப்பட்டு நன்மதிப்பு அளிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு கூறியது.
யூதர்களைக்
காப்பாற்றிய கத்தோலிக்கரை இனம் கண்டு கௌரவிப்பதன் மூலம் திருத்தந்தையின் புனித பூமிக்கானத்
திருப்பயணத்தை கொண்டாடவும் கத்தோலிக்கருக்கும் யூதருக்கும் இடையே தோழமையை ஊக்குவிக்கவும்
விரும்புவதாக அவ்வமைப்பின் அறிக்கை கூறியது.
வருகிற மேமாதம் 8-15 வரை திருத்தந்தை
16ம் பெனடிக்டின் புனித பூமிக்கானத் திருப்பயணம் நடைபெறவுள்ளது.