உலகில் சகிப்பற்றதன்மையை அகற்றுவதற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட திருத்தந்தை வலியுறுத்தல்
ஏப்.20,2009. இன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ள இனப்பாகுபாட்டிற்கெதிரான ஐ.நா கருத்தரங்கிற்கு
வத்திக்கான் பிரதிநிதி குழுவை அனுப்பியுள்ள அதேவேளை, உலகில் சகிப்பற்றதன்மையை அகற்றுவதற்கு
நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஞாயிறு மூவேளை
செப உரையின் இறுதியில் இவ்வாறு உரைத்த அவர், வரலாறு கற்றுக் கொடுத்துள்ள பாடங்களையும்
தவிர்த்து இன்றும்கூட இத்தகைய வருந்ததற்க சகிப்பற்றதன்மை சார்ந்த செயல்கள் இடம் பெறுவதால்
இந்த ஐ.நா.வின் முயற்சி முக்கியத்துவம் பெற்றது என்றார்.
இதில் கலந்து கொள்ளும்
பிரதிநிதிகள், உரையாடல் மற்றும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளும் உணர்வுடன் இனவெறி, இனப்பாகுபாடு,
சகிப்பற்றதன்மை ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கும் முடிவு கட்டுவார்கள் எனத் தான் நம்புவதாகவும்
திருத்தந்தை கூறினார்.
இத்தகைய முயற்சி, மனிதனின் மாண்பு மற்றும் அவனின் உரிமைகளின்
உலகளாவிய மதிப்பீட்டை உறுதி செய்வதற்கான ஓர் அடிப்படை நடவடிக்கையாக இருக்கும் என்றும்
அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐக்கிய
நாடுகள் நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கியுள்ள இனப்பாகுபாடு குறித்த
உலகக் கருத்தரங்கை அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, ஆஸ்திரேலியா, கானடா, இஸ்ரேல் எனக்
குறைந்தது எட்டு நாடுகள் புறக்கணித்துள்ளன.
உலகில் சகிப்புத்தன்மையை ஏற்படுத்த
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து கல்வி புகட்டப்பட
வேண்டுமெனவும் அவர் கோரினார்.
வருகிற வெள்ளியன்று நிறைவு பெறும் இக்கருத்தரங்கிற்கான
இறுதி தொகுப்பு, இஸ்ரேல் பற்றி விமர்சித்துள்ளது மற்றும் பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
என, இப்புறக்கணிப்புக்கு காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. இத்தகைய முதல் உலக மாநாடு 2001ல்
தென்னாப்ரிக்காவின் டர்பனில் நடைபெற்றது. எல்லா மக்களும் வளமான பன்னைத்தன்மையில் அனைவரும்
ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.