பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம்
வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு
கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்
கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது.
இரவுணவு வேளையில்தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து
வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய் இயேசு பந்தியிலிருந்து
எழுந்து தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.
பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த
துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர் ' ஆண்டவரே நீரா
என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக ' நான் செய்வது
இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார். பேதுரு
அவரிடம் ' நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து
' நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார். அப்போது
சீமோன் பேதுரு ' அப்படியானால் ஆண்டவரே என் காலடிகளை மட்டும் அல்ல என் கைகளையும் தலையையும்
கூடக் கழுவும் ' என்றார். இயேசு அவரிடம் ' குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால்
போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும்
தூய்மையாய் இல்லை ' என்றார். தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே
தெரிந்திருந்தது. எனவேதான் ' உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். அவர்களுடைய
காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து
அவர்களிடம் கூறியது: ' நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
நீங்கள் என்னைப் ' போதகர் ' என்றும் ' ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு
கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான் ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள்
காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் என்றார்.