திருத்தந்தை மீதான அண்மைக் குற்றச்சாட்டுகள் குறித்து இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் வருத்தம்
மார்ச்25,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு எதிரான விமர்சனங்கள் மட்டுமீறி சென்றுள்ள
நிலையில் கத்தோலிக்கர்கள் அவைகளோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டாம் என்று இத்தாலிய ஆயர்
பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பக்னாஸ்கோ கேட்டுள்ளார்.
உரோமையில் இத்திங்களன்று
தொடங்கியுள்ள இத்தாலிய ஆயர்கள் பேரவையின் நிலைத்த குழு கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய
ஜெனோவா பேராயர் கர்தினால் பக்னாஸ்கோ, திருத்தந்தை மீதான அண்மைக் குற்றச்சாட்டுகள் குறித்தத்
தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.
நம் அன்பு பாப்பிறை, லெப்பேப்ரே புனித பத்தாம்
பத்திநாதர் கழகத்தைச் சேர்ந்த நான்கு ஆயர்கள் மீதான தடையை அகற்றியது மற்றும் அண்மை ஆப்ரிக்கப்
பயணத்தின் போது கருத்தடை சாதனங்கள் பற்றிக் கூறியது குறித்து இத்தாலியிலும் வெளிநாடுகளிலும்
அவருக்கு எதிராக வீசப்பட்ட கடுமையான விமர்சனங்கள் அளவுக்கு மீறி சென்றுள்ளன என்ற கவலையையும்
கர்தினால் தெரிவித்தார்.
திருத்தந்தை கேலிக்கூத்துக்கு ஆளாகும் போதும் அவமதிக்கப்படும்
போதும் ஆயர்களும் விசுவாசிகளும் அதனை ஏற்கக் கூடாது என்றும், திருத்தந்தையோடு எப்பொழுதும்
காலவரையறையின்றி இருப்பதே நம் கத்தோலிக்கத்தின் நேர்த்தியான மரபு என்பதையும் இத்தாலிய
ஆயர் பேரவைத் தலைவர் கோடிட்டுக் காட்டினார்.