அன்னை தெரேசா சபையின் புதிய அதிபராக ஜெர்மன் நாட்டு அருட்சகோதரி பிரேமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
மார்ச்25,2009. முத்தி பெற்ற அன்னை தெரேசா சபையின் புதிய அதிபராக ஜெர்மன் நாட்டு அருட்சகோதரி
எம்.பிரேமா மார்ச்24,இச்செவ்வாயன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்னை தெரேசாவுக்குப்
பின்னர் 1997ம் ஆண்டிலிருந்து அச்சபையை வழிநடத்தி வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷி, இம்மாதம்
13ம் தேதி மூன்றாவது தடவையாக அச்சபையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆயினும்
அவர், தனது சுகவீனம், சபைக்குள்ளே தியான யோக வாழ்வு நடத்த விருப்பம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
சபை அதிபர் பொறுப்பிலிருந்து தன்னை நீக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அச்சபையின் பொது
அவை பிரதிநிதிகள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி முதல்
தேதி தொடங்கிய அச்சபையின் பொது அவையில் 74 இந்தியர் உட்பட 163 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் அச்சபையின் கொள்கைகளின்படி அதிபர் 2 முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். மூன்றாவது
தடவையாக தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் திருத்தந்தையின் அனுமதி தேவை. பொதுவாக சபை அதிபரின்
பதவிக் காலம் ஆறாண்டுகள் ஆகும்.