அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர் இயேசு
நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து அனைத்திலும் முதன்மையான கட்டளை
எது? என்று கேட்டார். அதற்கு இயேசு இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய
கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு
அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை
வேறு எதுவும் இல்லை என்றார்.
எல்லா மதங்களும் போதிப்பது அன்பு. தந்தையாம் இறைவன்
தம் மகன் இயேசுவை அன்பு செய்வது போல மனிதர் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். இந்த அன்பைப்
பெறும் மனிதர் இதற்குப் பதிலன்பைக் காட்ட வேண்டும். இறைவனை அன்பு செய்வது என்பது பிறரை
அன்பு செய்வது, பகைவரை அன்பு செய்வது மற்றும் பிறருக்கு வாழ்வு கொடுப்பதாகும். ஆம். பிறன்பில்
இறையன்பைச் சுவைக்கலாம்.
மார்ச் 20 - புனித உல்ப்ராம் விழா. அரண்மனையில் வாழ்ந்த
இவர், அவ்விடத்தின் இன்ப துன்பங்களுக்கு அடிமையாகாமல் இருந்தார். இவர் பேராயராக உயர்த்தப்பட்டாலும்
பின்னர் அப்பதவியைத் துறந்து ஆன்மீகத்தில் சிறந்து நற்செய்தி போதித்தார்.