அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ' மறைநூல்
அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன
செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.
ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில்
காட்ட மாட்டார்கள்.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்;
ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.5 தாங்கள் செய்வதெல்லாம்
மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை
அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.'வாசகப் பட்டை' என்பது
திருச்சட்டநூல் வாசகங்களைக் கொண்ட, நெற்றியிலும் கையிலும் கட்டப்படும் பட்டை ஆகும். 6
விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும்
விரும்புகின்றார்கள்;7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி
என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.'ரபி' என்னும் எபிரேயச் சொல்லுக்குப் 'போதகர்' என்பது
பொருள். 8 ஆனால் நீங்கள் ' ரபி ' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர்
ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என
நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.10
நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.11
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர்
எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.
இயேசு
தம் பணி வாழ்வில் இருவகையான மனிதரைச் சந்தித்தார். உயர்குடியினர் என்று அன்று கருதப்பட்ட
மறைநூல் அறிஞர், பரிசேயர், சதுசேயர், தலைமைக் குருக்கள் போன்ற ஒருவகையினர். இவர்கள் சட்டங்கள்
சடங்குகள் என்ற பெயரில் ஏழைகளை அடக்கி ஆண்டவர்கள். இவர்கள் போல் இன்றும் காணமுடிகின்றது.
ஒரு கவிஞர் பாடியது போல, சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது.
திட்டம் போட்டுத் திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. இந்தக் கூட்டம் பேசுவது
நீதி. ஆனால் செய்வது அநீதி. எனவே இதற்கு இயேசு தெளிவான தீர்வை முன்வைக்கிறார். அவர்கள்
செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள் என்கிறார். ஆம். மனங்களில் மாற்றம் ஏற்படாமல் சட்டங்களினால்
எதுவும் செய்ய முடியாது. மாற்றம் புதுப்பிறப்பிற்கான வழி.