இளையோர் புனித பவுலைப் பின்பற்றி கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சாட்சிகளாக வாழ வேண்டும்,
திருத்தந்தை
மார்ச்4,2009 “நாம் வாழும் கடவுளில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்ற தலைப்பை மையமாக வைத்து,
வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி குருத்தோலை ஞாயிறன்று மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படும்
24ம் உலக இளையோர் தினத்திற்கென இன்று வெளியிடப்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்டின் செய்தி,
இத்தாலியம், ஸ்பானியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் நிருபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நிகழ்வுக்கு நம்மை நாம் தயார்படுத்தி வரும் வேளை, கடந்த ஆண்டு ஜூலையில் சிட்னியில்
நடைபெற்ற கூட்டத்திற்காக நம் ஆண்டவருக்கு ஆழ்ந்த நன்றி தெரிவிக்கிறேன். மறக்கமுடியாத
அந்த முக்கிய நிகழ்வில் தூய ஆவி எண்ணற்ற இளையோரின் வாழ்வைப் புதுப்பித்தார். அந்த நிகழ்வின்
மகிழ்வும் ஆன்மீக ஆர்வமும் கிறிஸ்துவின் ஆவியின் பிரசன்னத்தின் ஆற்றல் நிறைந்த அடையாளங்களாக
இருந்தன. இப்பொழுது 2011ம் ஆண்டில் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் இச்சர்வதேச கூட்டத்தை
நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். “இயேசு கிறிஸ்துவில் வேரூன்றப்பட்டு அவரில் கட்டப்பட்ட
விசுவாசத்தில் உறுதியாக இருங்கள்” (கொலோ.2,7) என்ற பவுலின் கூற்று மத்ரித் கூட்டத்தின்
கருப்பொருளாகும். “உயிருள்ள கடவுளில் நம் நம்பிக்கையை வைத்துள்ளோம்” (1திமோ.4,10) என்ற
பவுலின் வார்த்தைகள் 2009ம் ஆண்டுக்கான தலைப்பாக இருக்கும் வேளை, , “நல்ல போதகரே, நிலை
வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ”( மாற்.10,17 ) என்று பணக்கார
இளைஞன் இயேசுவிடம் கேட்ட கேள்வி பற்றி 2010ம் ஆண்டில் நாம் சிந்திக்கவிருக்கிறோம்.
இளமை, நம்பிக்கையின் காலம்:
நாம் அனைவரும் நம்பிக்கைக்கான
தேவையை உணர்ந்துள்ளோம். அது சாதாரணமானதல்ல, மாறாக உறுதியான மற்றும் நம்பகத்தன்மை கொண்டதாகும்.
இளமை நம்பிக்கைக்கான சிறப்பு காலம். ஏனெனில் இக்காலத்தில் எதிர்காலம் மிகுந்த நம்பிக்கையுடன்
நோக்கப்படுகிறது. நாம் இளமையாய் இருந்த போது கருத்தியல்கள், கனவுகள், திட்டங்கள் ஆகியவற்ரில்
திளைத்திருக்கிறோம். இளமைக்காலம் நமது எதிர்காலம் பற்றிய தீர்மானங்கள் எடுக்கும் காலம்.
இதனால்தான், நான் ஏன் இவ்வுலகில் இருக்கிறேன்? என் வாழ்வின் அர்த்தம் என்ன? என் வாழ்வு
எதைப் போன்று இருக்கின்றது? மகிழ்ச்சியை எப்படி அடைய முடியும்? நோயும் துன்பமும் மரணமும்
ஏன்? மரணத்திற்குப் பின் இருப்பது என்ன? போன்ற அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன. படிப்பில்
கஷ்டத்தையும், வேலையில்லாமல் இருக்கும் போதும், நட்புகளில் பிரச்சனைகள் ஏற்படும் போதும்
நல்ல உறவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் போதும் நோயிலும் ஊனமுற்ற நிலையிலும் இக்கேள்விகள்
நம்மை அதிகம் துளைத்தெடுக்கின்றன. இந்நேரங்களில் எங்கிருந்து எப்படி நம்பிக்கையைப் பெறுவேன்
என்றும் நம்மைக் கேட்கிறோம்.
பெரும் நம்பிக்கைக்கான தேடல்:
மனிதனின்
சுயகுணங்களும் உலகப் பொருட்களும் அவன் தேடும் நம்பிக்கைக்கு உறுதி கொடுப்பதற்குப் போதுமானதாக
இல்லை என்று அனுவபங்கள் காட்டுகின்றன. அரசியலும் அறிவியலும் தொழிட்நுட்பமும் பொருளாதாரமும்
பிற உலக வளங்களும் நாம் தேடும் பெரு நம்பிக்கையை வழங்குவதற்குப் போதுமானதாக இல்லை. மாறாக
மனிதர் தேடும் நம்பிக்கை கடவுளில் மட்டுமே இருக்க முடியும். இதனால்தான் இறைவனைப் புறக்கணிப்பதால்
வரும் கடும் விளைவுகளை, அதாவது தனிமை, வன்முறை, திருப்தியற்றநிலை, நமபிக்கையின்மை போன்றவைகளை
நம் சமூகங்களில் காண முடிகின்றது. இந்நிலை ஏமார்றத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறது.
இந்தப்
பிரச்சனை இளைய சமுதாயத்தை அதிகம் பாதிப்பதாகத் தெரிகின்றது. குறைவான உறுதிப்பாடுகளையும்
விழுமியங்களையும் கொண்டுள்ள இன்றைய சமூக கலாச்சார சூழல்களில், இளையோர் தங்கள் சக்திக்கு
மேற்பட்ட துன்பங்களை எதிர்நோக்குவதாக உணருகிறேன். எனது இனிய இளம் நண்பர்களே, வாவ்க்கையில்
காயம்பட்ட உங்கள் வயதையொத்த பலர் என் நினைவில் இருக்கின்றனர். பிரிந்த குடும்ப சூழல்களால்,
கல்வியில் வழங்கப்படும் விடுதலைக் கூறுகளால் என பலவற்றால் ஏற்பட்ட பக்குவப்படாத தன்மையினால்
அடிக்கடி கஷ்டப்படுகின்றனர். இவற்றிலிருந்து தப்பிப்பதற்கு, ஆபத்தான மற்றும் வன்முறை
நடத்தைகள், போதைப் பொருள், மதுப் பழக்கம், இன்னும் பிற இத்தகைய செயல்களில் வேறு வழியின்றி
சிலர் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இன்னல் நிறைந்த சூழல்களில் தவறான எடுத்துக்காட்டுகளால்
வழிநடத்தப்பட்டு மோசமடைகின்றனர். இத்தகைய இளையோருக்கு நம்பிக்கை பற்றி எப்படி பேச முடியும்?
கடவுளில் மட்டுமே உண்மையான நிறைவை அடைய முடியும் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
எனவே இளைய தலைமுறைகள், அன்பே உருவான இறைவனின் உண்மையான திருமுகத்தை மீண்டும் கண்டு கொள்ள
அவர்களுக்குப் புதிய நற்செய்தி பணி ஆற்ற வேண்டியது திருச்சபையின் கடமையாகிறது.
புனித
பவுல் நம்பிக்கையின் சாட்சி
புறஇனத்தாரின் புனித பவுல் பிறந்ததன் 2000மாம்
இந்த யூபிலி ஆண்டில் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு உறுதியான சான்றுகளாகத் திகழ்வது எங்ஙனம்
என்று அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையான கிறிஸ்தவர்கள் பலவகை துன்பங்களை எதிர்நோக்க
வேண்டியிருந்தாலும்கூட அவர்கள் ஒருபொழுதும் வருத்தமாக இருக்கக் கூடாது, ஏனெனில் இயேசுவின்
பிரசன்னம் அவர்களது மகிழ்வு மற்றும் அமைதியின் இரகசியம். புனித பவுல் பல்வேறு துன்பங்களையும்
சோதனைகளையும் அதிகமாகச் சந்தித்த போது, அவர் தமது உண்மையுள்ள சீடர் திமோத்தேயுவுக்கு,
“நாம் வாழும் கடவுளில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று எழுதினார். அவரில் இத்தகைய நமபிக்கை
எப்படி வேரூன்றியது? இதற்கு அவரது தமஸ்கு அனுபவமே காரணம். அச்சமயத்தில் பவுல் இளையோரே
உங்களைப் போல இளைஞனாக 20களின் தொடக்க கால இளைஞனாக இருந்தார். மோசேயின் சட்டத்தைப் பின்பற்றுபவராக,
கடவுளின் பகைவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு எதிராகப் போராட, ஏன் அவர்களைக் கொலை செய்யவும்
அஞ்சாதவராக இருந்தார். ஆனாலும் நீ துன்புறுத்தும் இயேசு நான்தான் என்று தமஸ்கு சாலையில்
அவர் கேட்டதும் அவர் உயிர்த்த இயேசுவை சந்தித்தும் அவரது அகவாழ்வு முற்றிலுமாக மாறியது.
பின்னர் திருமுழுக்குப் பெற்றார். நற்செய்தியின் திருத்தூதுவரானார். துன்புறுத்துகிறவராக
இருந்த நிலையிலிருந்து கிறிஸ்துவுக்குச் சாட்சியாக மாறினார், மறைபோதகரானார். ஆசியா மைனரிலும்
கிரீஸிலும் கிறிஸ்தவ சமூகங்களை நிறுவினார். எல்லா வகையான ஆபத்துக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கான
மைல்கள் நற்செய்திக்காகப் பயணங்கள் மேற்கொண்டார். அப்பயணம் அவர் உரோமையில் மறைசாட்சியாகக்
கொல்லப்பட்டதில் நிறைவடைந்தது. இவையனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த அன்புக்காகச்
செய்தார். புனித பவுலுக்கு நம்பிக்கை என்பது வெறும் கருத்தியலோ உணர்வுப்பூர்வமானதோ அல்ல.
ஆனால் அது வாழும் மனிதனைப் பற்றியது. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து பற்றியது. அவர்
நம்மோடு இருக்கும் போது, இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டுமானால் அவர் நமது நிகழ்காலமாகவும்
எதிர்காலமாகவும் இருக்கும் போது நாம் ஏன் பயப்பட வேண்டும்?
கிறிஸ்தவ
நம்பிக்கைக்கு ஒத்து செயல்படுதல்
அன்று இயேசு இளைஞர் பவுலைச் சந்தித்தது
போல, இன்று, எனது இனிய இளம் நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க விரும்புகிறார்.
நான் எப்படி அவரை சந்திக்க முடியும் அல்லது எந்த வழியில் அவர் என்னை அணுகுவார் என்று
ஒருவேளை உங்களில் சிலர் கேட்கக்கூடும். நம் ஆண்டவர் இயேசுவைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலே
ஏற்கனவே அவரிந் அருளின் கனியாக இருக்கின்றது என்று தாய்த் திருச்சபை போதிக்கின்றது.
இடைவிடாமல் செபம் செய்வது அவரைப் பெறுவதற்கு நமது இதயத்தைத் திறந்து
வைக்கின்றது. உங்கள் வாழ்க்கையில் செபத்திற்குச் சிறப்பிடம் கொடுங்கள். சேர்ந்து செபிப்பது
அழகானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும் செபிப்பது என்பதே தன்னிலே நல்லதாகும். ஏனெனில்
என் பெயரால் எங்கே இரண்டு மூன்று பேர் கூடியிருக்கிறீர்களோ அங்கே நான் இருக்கிறேன் என்று
இயேசுவே மொழிந்துள்ளார். உங்கள் பங்குகளில் நடைபெறும் திருவழிபாடுகளில் பங்கு பெறுங்கள்.
இறைவார்த்தையால் போஷிக்கப்பட்டு திருவருட்சாதனங்களில் முழு ஈடுபாட்டுடன் பங்கு பெறுங்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவன் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவ சமூக வாழ்வின் மையமாகவும் உச்ச கட்டமாகவும்
இருப்பது திருப்பலி, திருநற்கருணை என்பது உங்களுக்குத் தெரியும்.
புனித
பவுல் போல கிறிஸ்துவில் ஆழமான வாழ்வு வாழ்ந்தால், அவரில் உங்கள் வாழ்வாதாரத்தைக் கண்டால்,
அவரைப் பற்றி உங்கள் வயதை ஒத்தவர்களிடம் உங்களால் பேசாமல் இருக்க முடியாது. இந்தச் சவால்
நிறைந்த தனது பணிக்குத் திருச்சபை உங்களைச் சார்ந்து இருக்கின்றது. நீங்கள் சந்திக்கும்
துன்பங்கள், சோதனைகள் கண்டு மனந்தளர்ந்துவிட வேண்டாம். பொறுமையுடன் விடா உறுதியுடன் இயல்பான
இளமைக்கால இடர்களைச் சந்தியுங்கள்.
இயேசு உங்கள் நம்பிக்கையாய் மாறினால்
அதனை மற்றவர்ககும் மகிழ்வோடும் ஆன்மீக, அப்போஸ்தலிக்க சமூக உற்சாகத்தோடு எடுத்துச் சொல்லுங்கள்.
உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவதாய் உங்கள் செயல்கள் இருக்கட்டும். தன்னல போக்கிற்கு
இடம் கொடாதீர்கள். பிறரை அன்பு செய்யப் பழகுங்கள். உங்களது திறமைகள் பிறருக்கு உதவட்டும்.
உண்மையான கிறிஸ்தவர்கள் ஒருபொழுதும், பல்வகைத் துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும்
போதுகூட வருத்தமாக இருக்கமாட்டார்கள். ஏனெநில் அவர்களின் மகிழ்வு மற்றும் அமைதியின் இரகசியம்
இயேசு கிறிஸ்துவே. இளையோர் உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ வேண்டும்.
இளையோர்
நம்பிக்கையின் தாயான கன்னிமரியா, கடலின் விண்மீன் இயேசுவைச் சந்திக்கும் இந்த உங்கள்
பயணத்தில் உங்களை வழிநடத்துவாராக. உங்களைத் தினமும் எனது செபத்தில் நினைவுகூருகின்றேன்.