இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு
கிறிஸ்தவ சபைகள் அழைப்பு
மார்ச்03,2009. இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களை முன்னிட்டு அந்நாட்டு அரசியல்
கட்சிகளுக்கென அறிக்கை தயாரித்துள்ள இந்திய கிறிஸ்தவ சபைகள், நாடு முழுவதும் சிறுபான்மையினரின்
பாதுகாப்புக்கு உறுதி வழங்குமாறு கேட்டுள்ளன.
சிறுபான்மையினர் தேர்தலில் பங்கெடுப்பதற்கு
உறுதி எடுக்குமாறு அழைக்கப்பட்டுள்ள வேளை, சிறுபான்மையினரின் உரிமைகளும் சமய சுதந்திரமும்
பாதுகாக்கப்படவும், வன்முறைகளையும் பாகுபாடுகளையும் தவிர்க்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்
அரசியல் கட்சிகள் உறுதி வழங்குமாறும் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகளும் கையெழுத்திட்டுள்ள
அறிக்கை கூறுகிறது.
புதுடெல்லி கத்தோலிக்கப் பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோவின்
தலைமையில், இவாஞ்சலிக்கல், பெந்தகோஸ்து, இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டு இந்திய அரசியல் கட்சிகளுக்கான இவ்வறிக்கையை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டனர்.
கிறிஸ்தவர்கள்
எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்தாலும் கல்வி, சமூக நலவாழ்வுப் பணிகள் போன்றவை வழியாகவும்
ஒடுக்கப்பட்டோர் ஓரங்கட்டப்பட்டோர் ஆகியோரின் குரலாகவும் ஆற்றும் சேவையானது நாடு முழுவதும்
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
1950ம் ஆண்டின்
அரசியல் அமைப்பில் விளக்கப்பட்டுள்ள இந்தியாவின் பன்மைத்தன்மை கொண்ட சமயசார்பற்ற சமுதாயம்
உருவாகும் மற்றும் ஜனநாயகப் பாதையில் நாடு செல்லும் என்ற தங்கள் நம்பிக்கையையும் அதில்
கிறிஸ்தவத் தலைவர்ககள் சுட்டிக்காட்டியுள்ளனர்.