2009-02-18 14:37:44

காங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும், ஆயர்கள்


18பிப்.2009. காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு மக்கள் தொடர்ந்து போரைச் சந்தித்து களைப்படைந்துள்ளார்கள் என்பதால் அவர்கள் தங்கள் நாட்டில் வெளிநாட்டுப் படைகள் இருப்பதை விரும்பவில்லை என்று அந்நாட்டு ஆயர்கள் அறிவித்தனர்.

தலைநகர் கின்ஷாசாவில் ஆண்டு கூட்டம் நடத்திய ஆயர்கள் வெளியிட்ட செய்தியில், காங்கோ நாட்டினரைக் கொண்ட தேசிய இராணுவம் உருவாக்கப்படுவதில் காணப்படும் மந்தநிலையானது வெளிநாட்டுப் படைகள் பயன்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைகின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் வெளிநாட்டுப் படைகளின் இருப்பு, அவைகளின் சரியான வேலை, அந்நாட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் தன்மை, கூறுகள் போன்றவை பற்றிப் பல குடிமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.

காங்கோவின் கிழக்குப் பகுதியில் பல வாரங்களாக உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளின் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன என்றும் அச்செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.