2009-01-31 19:54:16

வழிபாட்டின் 4 ஆம் ஞாயிறு . மறையுரை . - 31 ஜன. 09 .


பெத்தோவன் என்பவர்தான் மிகப் பெரிய இசை மேதை என்று பலர் கூறுவர் . மோசார்ட் தான் மிகப்பெரியவர் என்று வேறு சிலர் கூறுவர் . இந்த இசை மேதைகள் விண்ணையே மண்ணுலகுக்குக் கொண்டு வந்ததாகக் கூறுவர் .

இந்த இசை மேதைகள் இசைக்குச் செய்ததையே இயேசு தமது திறமையான போதனைகள் வழியாகச் செய்தார் . இயேசு வானகத்தை மண்ணுலுகுக்கும் மண்ணுலகை விண்ணுக்கும் கொண்டு சென்றார் . வானகத்தைச் சேர்ந்த அவர் நம் உலகுக்கு வந்து இவ்வுலகக் குடிமகன் ஆனார் .அவருடைய பண்பாடு மிக்க வாழ்க்கை நெறிகளை நமக்குக் கற்றுக் கொடுத்தார் . நாம் இவ்வுலகை விட்டு நீங்கும் போது அவரோடு வானகம் சென்று தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் .

இன்றைய தூய மாற்கு நற்செய்தி அவருடைய போதனைகளின் சக்தி பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகிறது .

இயேசு தம் வாக்கால் மக்களை தம் வயப்படுத்தியிருந்தாதக் கூறுகிறார் மாற்கு . இயேசு தொழுகைக் கூடத்தில் போதித்ததற்கும், யூதக் குருக்கள் போதித்ததற்கும் மாபெரும் வேறுபாடு இருந்ததாகக் கூறுகிறார் . இயேசு மக்கள் மீது மட்டும் நல்ல தாக்கம் ஏற்படுத்தவில்லை , தீய ஆவிகளும் அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டன . அவை அலறிக்கொண்டு தீயில் இடப்பட்ட ஐஸ் கட்டி போன்று மறைந்தன .

அவருடைய ஆழ்ந்த கருத்துக்களின் காந்த சக்திமட்டுமல்ல , அவருடைய போதனையின் புதுமையான புத்துணர்ச்சியும், புதுப் பொலிவும் மக்களைக் கவர்ந்து இழுத்தன . நல்ல போதனைக்குப் பசியாக இருந்த மக்கள் புதிய போதனையை அவரிடம் கேட்கமுடிந்தது . அக்காலத்து யூதகுலப் போதகர்களோ பழைய கருத்துக்களை , அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தனர் .

கப்பர்நகூமில் இயேசு தம் போதனையின் வல்லமையைக் காட்டினார் . தம் கருத்துக்களைப் பிறர் ஏற்க மறுத்தாலும் தெளிவாக , உறுதியாகச் சொல்ல வந்ததைக் கூறுவதை அவர்கள் கேட்டனர் . அவர் கூறியதை மக்கள் பாராட்டினர் . சில போதனையாளர்கள் கேட்பவர்கள் மனத்தில் நம்பிக்கையை விதைப்பதில்லை . ஆனால் இயேசுவின் போதனைகள் தெளிவாக , அவர் தாம் நம்பியதையே மக்கள் பின்பற்றுவதற்கு முன் வைத்தார் .

நாமும் அவருடைய வார்த்தைகளுக்கும், நம்முடைய விசுவாசத்துக்கும் பிரமாணிக்கமாக இருக்க வேண்டுமென்றால் , நம்முடைய கருத்துப் பரிமாற்றமும் தெளிவாக மக்கள் மனத்தில் நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும் . சவால்களை வைப்பதாக இருக்க வேண்டும் . நாம் மனப்பாடம் செய்து பழைய கருத்துக்களையே பரிமாறுவதைத் தவிர்க்க வேண்டும் .

மருத்துவ உலகில் , புதிய கண்டுபிடிப்புக்களில் நாம் புதியனவற்றை வரவேற்கிறோம் . ஆனால் அதே புதிய சிந்தனைகளை நாம் நம் சமயத்தில் கேட்கும்போது அதை நம்பாமல் , சந்தேகத்தோடு ஒதுக்கி விடுவது ஏன் ? .

இயேசுவின் நிரந்தரமான அர்த்தமுள்ள செய்தி, நற்செய்தி என்று அழைக்கப்படுகிறது . அதாவது புதிய கருத்துக்கள் நல்லவையே . நாம் அவைகளுக்கு அஞ்சத் தேவையில்லை என்பதை நாம் அறிகிறோம் . நாம் இயேசுவின் போதனைகளில் உள்ள புதுமை உணர்வுகளைச் சரியாக புரிந்து கொண்டு நம்முடைய உலகிலும் நம்முடைய வாழ்விலும் மறைந்துள்ள உண்மைகளை ஆழமாக உணர்ந்து , இயேசுவின் நற்செய்தியை நம் வாழ்வில் மலரச் செய்வோமா ? .








All the contents on this site are copyrighted ©.