கிறித்தவ ஐக்கியத்திற்காக உழைப்பவர்களுக்கான மாதிரிகை புனித பவுல்.
26ஜன.2009. புனித பவுலின் மனமாற்றம், முழு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான பாதையில்
கிறிஸ்தவர்களுக்கு
முன்மாதிரிகையாய் இருக்கின்றது என்று, கடந்த சனிக்கிழமை மாலை புனித பவுல் பசிலிக்காவில்
நடைபெற்ற மாலை திருவழிபாட்டில் கூறினார் திருத்தந்தை.
ஜனவரி 18 முதல் 25 வரை கடைபிடிக்கப்பட்ட
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு வழிபாட்டில் மறையுரையாற்றிய அவர், ஒன்றிப்புக்கு
மனமாற்றம் தேவைப்படுகின்றது என்றார்.
இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து
கொரிய கிறிஸ்தவர்களால் இவ்வாரத்திற்கென பரிந்துரை செய்யப்பட்ட தலைப்பை மையமாக வைத்து
தமது சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கடவுள் தமது மக்களை புதிய ஐக்கியத்திற்கு அனுமதிக்கிறார்,
இது ஒப்புரவு மற்றும் அமைதியின் அடையாளமாகவும் கருவியாகவும் இருக்கின்றது என்றார்.
இந்த
ஒன்றிப்பைக் கடவுள் தமது திருச்சபைக்குக் கொடுக்கிறார், இதனை அடைய நாம் செபிக்க வேண்டும்
என்றும் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
கூட்டப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டிய சிந்தனைகளையும் திருத்தந்தை பகிர்ந்து கொண்டார்.