வன்முறைக்கு உள்ளாகி வரும் ஈராக்கியருடன் திருத்தந்தை தோழமை
ஜன.24,2009. கடந்த பல ஆண்டுகளாக வன்முறைக்குப் பலியாகிவரும் ஈராக்கியருடனும் தலத்திருச்சபையுடனும்
தனது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதாக, இன்று திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த மத்திய கிழக்குப்
பகுதியின் கல்தேய ரீதி கத்தோலிக்க ஆயர்களிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு
இன்று மத்திய கிழக்குப் பகுதியின் கல்தேய ரீதி கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்து உரையாற்றிய
திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஈராக்கில் கொல்லப்பட்ட பேராயர் பவுல் பராஜ் ராகு,
அருட்திரு ரஹித் அஜிஸ் கானி ஆகியோரின் நினைவுப் பொருட்களையும் அவ்வேளையில் பெர்றுக் கொண்ட
அவர், இத்திருச்சபை அதிகாரிகளின் தியாகம், அவர்கள் திருச்சபை மற்றும் சமுதாயம் மீது கொண்டிருந்த
அன்பின் வெளிப்பாடாக இருக்கின்றது என்றார்.
இன்றைய மத்திய கிழக்குப் பகுதியில்
மக்களிடையே குறிப்பாக இளைய சமூகத்திடையே உயர் கலாச்சாரம் ஒன்றை ஊக்குவித்தல், ஏனைய சமூகங்களுடன்
நல்லுறவை நிலைப்படுத்தல், ஒத்துழைப்பைக் கட்டி எழுப்புதல் போன்றவைகளில் தலத்திருச்சபையின்
ஈடுபாட்டின் அவசியத்தையும் அதில் இறைவார்த்தையின் இடத்தையும் வலியுறுத்திப் பேசினார்
திருத்தந்தை.
கல்தேய ரீதி எல்லைக்கு வெளியே வெலிநாடுகளில் வாழவேண்டிய நிலைக்கு
மோதல்களால் தள்ளப்பட்டுள்ள மக்கள் அத்திருச்சபையுடன் தொடர்புடன் வாழவும் அவர்களுக்கான
கல்தேய ரீதி சபையின் பணியையும் மேலும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.