திருத்தூதர் பவுலின் மனமாற்றம் பற்றி திருத்தூதர் பணியில் 3 இடங்களில் கூறப்படுகிறது
. 9, 1-22 , 22, 3-16 , 26, 9-23 .
இதிலிருந்து இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம்
பற்றி உணர்த்தப்படுகிறது .யூத மதத்தின் ஒரு கிளை என்பதிலிருந்து விடுபட்டு , தனித்து
நின்று , யூதருக்கும் புற இனத்தவருக்கும் கிறிஸ்துவத்தின் நற்செய்தியைப் போதிக்கத் தொடங்கியதற்குக்
காரணமும் அடிப்படையுமாயிருந்தது பவுலின் மனமாற்ற நிகழ்ச்சி என்பதை மறுக்கமுடியாது . மனமாற்றம்
என்பதைவிட பவுலின் அழைப்பு என்று இந்த நிகழ்ச்சியைக் குறிக்கலாம் .
மனமாற்றம்
ஒருவரது வாழ்வின் உயர் குறிக்கோளை சரியான பாதையில் மாற்றி அமைக்கிறது . அதனால் பழக்கவழக்கத்திலும்
பண்பாட்டிலும் , நடத்தையிலும முழுமையான மாற்றம் உண்டாகிறது . இதனால் உடன் இருப்பவர்களின்
வெறுப்பைக் கூட பெறவேண்டிய நிலை உண்டாகலாம் .
விவிலியத்தில் காணப்படும் சக்கேயு
என்பவர் வாழ்வைத் தொலைத்து வசதி வாங்கியவர் . பணத்தைப் பிரதானமாக்கி மனத்தை வனாந்திரமாக்கியவர்
. தங்க முட்டைக்காக வாத்தை வெட்டியவர் . யூதரின் இரத்தம் குடித்த பணப்பித்தர். வெறுமையோடு
வீங்கிக் கிடந்த அவரது இதயம் கரைதேடும் அலையாய் கடவுளைத் தேடியது .
இயேசு
அழைத்தார் . அதனால் சக்கேயு மனமாற்றம் பெற்றார் . வெறுங்குடமான தன்னை அருளால் ஆண்டவன்
இயேசு நிரப்பியபோது மனமாற்றம் வந்தது . திருடி இருந்தால் , தீர்ப்பைத் திருத்தியிருந்தால்
, ஏமாற்றிக் கவர்ந்திருந்தால் , ஏய்த்துப் பிழைத்திருந்தால் , சோரம் போயிருந்தால் . சொத்தை
அவகரித்திருந்தால் , உறவுகளை ஊனப்படு்த்தியிருந்தால் , ஊழலின் ஊற்றுக்கண்ணாயிருந்தால்,
சபலத்தில் சடுகுடு ஆடியிருந்தால் நான்கு மடங்காய் நன்மை செய்துவிடுகிறேன் . அது , நிஜத்தில்
கால்பதித்த நெஞ்சத்தின் உயிர்த்தவிப்பு . நான்கு மடங்காய்த் திருப்பித்தருகிறேன் . இதுதான்
மனமாற்றம் . மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்குத் திரும்புதல் . பாறைக்குள் பதுங்கியிருந்த
பதுமையைப் பக்குவமாய் தட்டி எடுக்கும் அதிசயம் . முள்ளில் விழுந்த சேலையைக் கிழிபடாமல்
எடுக்கும் கலை . எல்லாம் இழந்து இறைவனை மட்டும் பற்றிக்கொள்ளும் ரகசியம் .
தம்
அழைப்புக்கு முன் பவுல் பாவிகளுள் முதன்மையான பாவி நான் என்பார் பவுல் . கடவுளின் திருச்சபையை
மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றவர் பவுல் . சவுல் சீறி எழுந்து ஆண்டவரின்
திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார் . கிறிஸ்து நெறியைச் சார்ந்த ஆண்களையும்
பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தார் பவுல் . இந்நிலையிலும் இறைவன் அவரைத் தாயினும் சாலப்பரிந்து
தடுத்தாட் கொள்கிறார் . இறைவனுக்கு முன் நாம் அனைவரும் பாவிகளே . எனினும் நாம் மனம் தளரத்
தேவையில்லை .
தம் அழைப்பிலே பவுல் .
கிறிஸ்தவர்களை எதிர்த்துச்
சென்றார் பவுல் . ஆனால் அவருக்கு எதிர்ப்பட்டவர் கிறிஸ்துவே . ஒருமுறை கிறிஸ்துவை எதிர்ப்பட்ட
பவுல் தாமே கிறிஸ்துவாகிறார் . இனி வாழ்பவன் நானல்ல . என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்
என்று கூறக்கூடிய நிலையை அடைகிறார் . இந்நிலையிலே இனிக் கிறிஸ்துவும் கிறிஸ்தவர்களும்
அவருக்கு ஒன்றே . நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசு நானே என்ற சொற்கள் பவுலுக்கு
மட்டுமன்று நமக்கும் பாடமாய் அமைகின்றன . கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு அவரை நேசிப்போமாயின்
எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும் . கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே சாதி , குலம் , ஏழ்மை
முதலிய அடிப்படையில் வேறுபாடுகள் காட்டுவோமாயின் கிறிஸ்துவையே எதிர்த்துப் போராடுகிறோம்
என்பதை உணர்கிறோமா .
தன் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு
அறிவிக்குமாறு பவுல் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார் . உயிர்த்த இயேசு திருத்தூதர்களுக்கு
அளித்த பணியும் அதுவே .
கிறிஸ்துவின் நற்செய்தியாகிய கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டவன்
என்ற முறையில் தான் பெற்ற பேற்றை வையகத்துக்கு அளிக்கக் கடமைப்பட்டவன் . எனவே தான் நற்செய்தியை
அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு என்பார் பவுல் . உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்னும் கட்டளை திருத்தூதர்களுக்கு மட்டுமன்று நமக்கும்
தரப்பட்டுள்ளது . நற்செய்தியைப் போதிப்பது நமது கடன் . அதை வாழ்ந்து காட்டுவது நமது இன்றியமையாத
கடன் . இயேசுவின் மதிப்பீடுகளை நமது வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டு வாழ்வோம் . அப்போது
நமது வாழ்வே போதகமாக அமையும் . வாழ்வும் போதகமும் இணைந்து செல்லும்போதுதான் உண்மைக்குச்
சாட்சியம் இருக்கும் . சொல்வழக்கா , செயல் வழக்கா என்பதல்ல கேள்வி . இரண்டும் இணைந்தே
செயல்படவேண்டும் .
இயேசுவின் பெயரில் சக்தி ! .
இயேசுவில்
, இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைப்பதுதான் விசவாசம் . இதுதான் நற்செய்தியும் கூட . இயேசுவின்மீது
ஆழ்ந்த நம்பிக்கை வைக்கவேண்டியது நமது கடன் . நமது வாழ்க்கையிலே , நமது நாவிலே , நமது
செவிகளிலே , என்றும் இப்பெயர் ஒலித்திட வேண்டும் . இயேசுவின் திருநாமகீதம் நம் நாவிலே
சங்காக முழங்காக வேண்டும் . அப்போது தீயோனோ , தீவினைகளோ ,நம்மை ஒருபோதும் அணுக முடியாது
. இயேசுவின் திருப்பெயர் நம் உள்ளத்திலும் உதட்டிலும் எப்பொழதும் இசையாக முழங்கட்டும்
. இயேசு கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசி நம்மோடு செயல்புரிகிறார் . நமது வார்த்தைகளையும்
செயல்களையும் அவரது வல்லமையால் உறுதிப்படுத்துகிறார் . இயேசு நம்மோடு இருந்து நம்மில்
செயல்புரியும்போது நமக்கு பயமேது ? .
முடிவாக நமது வாழ்க்கையில் நாமும் திருத்தூதர்
பவுலைப் போன்று எங்கெல்லாம் மனமாற்றம் தேவையோ அங்கெல்லாம் மாற்றம் கொண்டுவரத் தயாராக
இருக்கிறோமா . எப்பொருள் யார் யார் வழியாகக் கேட்டாலும் அதன் மெய்ப்பொருள் காண வேண்டாமா
. மெய்ப்பொருள் கண்டால் திருத்தூதர் பவுலைப் போல நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளத் தயாராக
இருக்கிறோமா . உண்மைக் கடவுளை திருத்தூதர் பவுலைப்போல இனம் கண்டு கொண்டால் அவரைப் பின்
தொடர நாம் தயாராக இருப்போமா . பழையன கழிந்து புதியன புகுதல் நல்லதுதானே . கடவுளின் அருளால்
திருத்தூதர் பவுல் மனம் மாற்றம் பெற்று புது வாழ்வு வாழ்ந்தார் . நாம் அவ்வாறு வாழ்வது
எப்போது ? . யாரையாவது வஞ்சித்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பித் தருவது எப்போது
.