2009-01-05 14:58:32

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒருவர்கூட மடுமாதா திருத்தலத்தைச் சந்திக்க வரமுடியவில்லை


ஜன.05,2009. கிறிஸ்துமஸ் காலத்தில் மடு பகுதியில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுமாறு தலத்திருச்சபைத் தலைவர்கள் விடுத்த அழைப்பை இலங்கை அரசு ஏற்க மறுத்ததால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒருவர்கூட மடுமாதா திருத்தலத்தைச் சந்திக்க வரமுடியவில்லை எனத் தனது கவலையை வெளியிட்டார் அத்திருத்தல நிர்வாகி.

ஏறத்தாழ மூவாயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்திருக்க, இராணுவம் அனுமதி வழங்க மறுத்ததால் ஒரு திருப்பயணிகூட வரவில்லை என்றார் மடுமாதா திருத்தலத நிர்வாகி அருட்திரு சந்தியாபிள்ளை எமிலியாம்பிள்ளை.

யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம், மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு, அனுராதபுர ஆயர் நார்பெர்ட், குருநெகாலா ஆங்கிலக்கன் ஆயர் குரே இலங்கசிங்கே, கொழும்பு ஆங்கிலக்கன் ஆயர் துலீப் தெ சிக்கேரா ஆகியோர் இணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கால போர் நிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பை அரசு ஏற்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.