2008-12-20 19:57:58

திருவருகைக் காலத்தின் 4 ஆம் ஞாயிறு . 21 , டிசம்பர் ,2008.


நற்செய்தி வாசகம் - தூய லூக்கா நற்செய்தி . 1 , 26 – 38 .

ஆற்றில் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது . ஆற்றுமீன் கடலுக்குள் சென்று வலம் வரலாயிற்று . அங்கு கண்ட பெரிய கடல் மீனிடம் கடல் எங்கே இருக்கிறது எனக் கேட்டது . நீ இருக்கும் இடம்தான் கடல் என்றது பெரிய மீன் . ஓ , இது உப்பு நீராக இருக்கிறதே . நான் கடலைத் தேடிக்கொண்டிருக்கிறேன் எனக்கூறி ஆற்று மீன் கடலைத் தேடிச் சென்றது . இன்றைய நற்செய்தி இயேசுவை கடவுள் நம்மோடு என்று அறிமுகப்படுத்துகிறது . நம்மோடு வாழும் கடவுள் . நம்மோடு தங்கி ,வாழும் கடவுளை நாம் நம்மிலும் , பிறரிலும் உணர்தல் வேண்டும் .



கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தரக்கூடிய காலம் . பல நல்ல காரியங்கள் நடக்கின்றன . குடும்பங்கள் ஒன்று சேருகின்றன . உள்ளத்தை நெகிழச்செய்யும் இனிமையான பாடல்கள் . புத்தாடைகள் . நண்பர்களைச் சந்தித்தல் . இனிப்பு வகைகளும் நல்ல உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன . இதற்கு மேலாகவும் இன்னும் பல அற்புதமான காரியங்கள் உள்ளன .



கிறிஸ்துமஸ் விழாவினை அர்த்தமுள்ளதாக்கக் கூடிய முக்கியமான காரியங்கள் உள்ளன . ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாக்களிக்கப்பட்ட உறுதிமொழிகள் . ஆதாமுக்கும் ஏவாளுக்கும் , தாவீது மன்னருக்கும் , இறைவாக்கினர்களுக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் .



இயேசு பிறப்பதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னரே கடவுள் அருளிய வாக்குறுதிகள் வந்துவிட்டன . தீமை வெல்லப்படும் . நிரந்தரமான அமைதிக்கு வழி பிறக்கும் . முடிவில்லாத மகிழ்ச்சியும் , அன்பும் நிலவும் . மன்னர் ஒருவர் பிறப்பார் . முடிவில்லாத காலமும் ஆட்சிபுரிவார் . நீதியோடும் உண்மையோடும் அரசாள்வார் . தாவீதைப் போன்ற ஒரு மன்னர் . ஆனால் அவரைவிட மேலானவர் . ஏழைகளுக்கு ஈடேற்றம் கிடைக்கும் . விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் நீதி கிடைக்கும் .



இந்த நன்மைகளெல்லாம் , நம்பிக்கையெல்லாம் , ஒரு இளம் பெண்ணைப் பொறுத்திருந்தது . அவள் ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளிக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தவள் .



ஒருவேளை நீங்கள் அந்த இடத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் . எண்ணிப்பாருங்கள் . மரியாவை ஒரு வானதூதர் சந்திக்க வருகிறார் . ஒருவேளை நல்ல உறக்கத்தின்போது கனவு வேளையிலோ , ஒருவேளை கிணற்றிலிருந்து வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வரும்போதோ .... வானவர் சந்தி்த்தார் .

அந்த வானதூதர் மரியாவிடம் கடவுள் அவரை அன்பு செய்வதாகக் கூறுகிறார் . ஆண்டவரின் அருளை மிகவே பெற்றிருப்பதாகக் கூறினார் . மரியாவை அச்சம் ஆட்கொள்கிறது . வானவரைக்கண்டால் யாருக்குப் பயம் வராமல் இருக்கும் . அஞ்ச வேண்டாம் என மரியாளிடம் கூறப்படுகிறது . ஆனால் வானவர் கூறிய வார்த்தைகள் , மரியாவுக்குச் சில சிறப்பான பணிகள் காத்திருப்பதாகக் கூறுப்போது , கடவுள் அருளால் மரியாள் தாயாகப் போகின்றாள் எனக்கேட்டால் , ஒரு மகவைப் பெற்றெடுப்பார் , அந்த மகன் வாக்களிக்கப்பட்ட மன்னர் என்றும் , மெசியா என்றும் தெரிவிக்கப்படுகிறார் .

மரியாவின் பதில் நாம் எதிர்பார்க்கும் ஒனறே . இது எப்படி நடக்கும் . நான் ஒரு கன்னிகையாயிற்றே .



நம் வழியாகக் கடவுள் எவ்வாறு செயலாற்றமுடியும் . நாம் சூனியங்கள் . நாம் நிறைவில்லாதவர்கள் . கடவுள் ஆவியாக இருப்பவர் . நாம் உடலோடு இருப்பவர்கள் . நாம் முக்கியமானவர்கள் அல்லர் . கடவுள் நம்மைப் பயன்படுத்த மாட்டார் . அவரால் பயன்படுத்த முடியாது . ஒருவேளை சிறுசிறு காரியங்களில் நம்மைப் பயன்படுத்தலாம் . நம்மைச் சுற்றி இருப்பவர்களை அன்பு செய்யச் சொல்லலாம் .ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவி செய்யச் சொல்லலாம். இவையெல்லாம் நாம் செய்யக்கூடியவைகள் .



இது எப்படி ஆகக் கூடும் . நான் கன்னிகையாயிற்றே . நான் எப்படி மீட்பருக்குத் தாயாவது . ஆனால் வானவர் வலியுறுத்தினார் . கடவுளின் வல்லமை நிழலிடும் . அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார் . அவருக்கு இயேசு என்று பெயரிடவேண்டும் . இயேசு என்ற பெயருக்கு ஆண்டவர் மீட்கிறார் என்பது பொருள் . மரியாள் இதோ நான் ஆண்டவரின் அடிமை . நீர் வாக்களித்தபடியே எனக்கு ஆகட்டும் என்றார் . கடவுள் விரும்பியதை நிறைவேற்ற மரியாள் தயாரானார் . கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் . ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடந்தது . அவர் கருவுற்றாள் . மரியாள் கடவுள் விருப்பத்துக்குக் கீழ்ப்படிந்தார் . கடவுள் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு , சிந்தையில் வரக்கூடிய எத்தனையோ தடைகள் --- மரியாள் மண ஒப்பந்தமானவள் – கன்னிகையாக இருக்கிறாள் .கருவற்றுள்ளாள் . கணவராகத் தேர்வு செய்யப்பட்ட சூசைக்கு எப்படிப் பதில் சொல்லுவது . சிரமங்கள் இருந்தாலும் கடவுள் விருப்பத்தை மனதார ஏற்றுக் கொண்டபோது மரியாவின் உள்ளத்தில் நம்பமுடியாத மகிழ்ச்சி நிறைந்திருந்தது . என் ஆன்மா ஆண்டவரைப் போற்றுகின்றது என மகிழ்ச்சிக் கீதம் பாடினாள் . இது முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுவார்கள். ஏனெனில் கடவுள் எனக்கு அரும் பெரும் செயல்கள் செய்துள்ளார் என்றார் .

முன்பு உணர்ந்திராத அளவு கடவுள் உண்மையானவர் என்றும் , கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்றும் , அவர் கூறியபடி மீட்பர் வருகிறார் என்றும் மரியாள் ஆண்டவரைப் போற்றுகிறார் . மரியாள் கடவுளை நினைத்துப் பேருவகை கொள்கிறார் . மரியாவின் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் , அமைதியையும் , நம்பிக்கையையும் , அன்பையும் நம்முடைய பொம்மைகளோ , பரிசுகளோ , கீதங்களோ , நம்முடைய கொண்டாட்டங்களோ தரமுடியாத அளவு கடவுள் நிரப்பியிருந்தார் .

நம்முடைய உள்ளங்களும் கடவுள் வார்த்தையைக் கேட்டு நாம் கீழ்ப்படியும் போது மிக்க மகிழ்ச்சியையும் , அமைதியையும் , நம்பிக்கையையும் ,அன்பையும் நமக்கும் , நாம் உலகில் ஒளியாக இருப்பதற்கும் வேண்டிய அளவு தரப்படும் .



உலகின் நம்பிக்கை மரியாளின் பதிலை நம்பி இருந்தது. அவர் கீழ்ப்படிந்தார் . இயேசு பிறந்தார் . இன்றைய உலகத்தின் நம்பிக்கை நம்மை எதிர் நோக்கியிருக்கிறது . நாமும் மரியாவைப் போல இருப்போமா . நம்முடைய செயல்களில் , நம்முடைய சிந்தையில் , நாம் கடவுளைப் பிரசன்னமாக்குவோமா . நாம் கடவுள் விருப்பத்துக்குப் பணிந்திருப்போமா . அவர் காட்டும் வழியில் நடப்போமா . திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வருகைக்கு வழிகளைச் செம்மைப்படுத்துங்கள் எனக் கூறுகிறார் . நம் வழியாக ஆண்டவரின் அன்பும் அருளும் உலகுக்கு ஆற்று நீராகப் பாய்ந்தோட வாய்ப்புள்ளது . நாமும் மரியாவைப் போன்று நம்பிக்கைகொண்டு , ஆண்டவருக்குப் பணிவோமென்றால் கடவுளால் ஆகாதது ஏதேனும் உள்ளதா .

கடவுள் தரும் நற்செய்தியை இயேசுவின் வழியாக நாம் கேட்போமென்றால் , நம் உள்ளங்கள் மட்டுமல்ல , உலகில் வாழும் எல்லோருடைய உள்ளமும் கடவுளை மாட்சிமைப் படுத்தி கீதங்கள் பாடும் . ஏனென்றால் அனைவரும் கடவுளுடைய வாக்குறுதிகள் வாழ்வில் நிறைவேறுவதைக் காண்பார்கள் . கடவுளுடைய வார்த்தைக்கு நாம் நன்றி கூறுவோம் . இயேசுவின் வருகைக்காக கடவுளுக்கு நாம் நன்றி கூறுவோம் .

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள் .








All the contents on this site are copyrighted ©.