ஈராக்கின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தாரிக் அசிஸ் விடுதலைக்கு திருத்தந்தை உதவ விண்ணப்பம்
டிச.17,2008. ஈராக்கின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் ஹூசேனின் ஆட்சியில் சர்வதேச அளவில்
பிரபலமாக இருந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் தாரிக் அசிஸ், இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில்
விடுதலை செய்யப்படுவதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உதவுமாறு அசிஸின் வழக்கறிஞர்
பாத்யெ அரிப் விண்ணப்பித்துள்ளார்.
தாரிக் அசிஸ் 2003ம் ஆண்டிலிருந்து ஈராக்கில்
அமெரிக்க ஐக்கிய குடியரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவரது கைது எந்தச்
சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அவருக்கு எதிராக உண்மையான குற்றச்சாட்டுகள்
இல்லை என்று அசிஸின் வழக்கறிஞர் இத்தாலிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறினார்.
பாக்தாத்
விமான நிலையத்துக்கு அருகிலுள்ள சிறையில் அமெரிக்க ஐக்கிய குடியரசுப் படைகளின் காவலில்
இருக்கின்ற 72 வயதாகும் அசிஸ், பல்வேறு நோய்களால் துன்புறுகிறார் என்றும் அவ்வழக்கறிஞர்
தெரிவித்தார்.
ஈராக் - அமெரிக்க ஐக்கிய குடியரசு இவற்றுக்கிடையே இடம் பெற்றுள்ள
பாதுகாப்பு குறித்த சோப்பா உடன்பாட்டின்படி இவ்வாண்டு இறுதிக்குள் அமெரிக்க ஐக்கிய குடியரசுப்
படைகளின் காவலில் இருக்கின்ற கைதிகள் ஈராக் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனச்
சொல்லப்பட்டுள்ளது.