நவ.26.,2008 வளரும் நாடுகளில் எட்டு சிறாருக்கு ஒருவர் வீதம் ஆரம்பக் கல்வி பெறாமல்
இருக்கின்றனர் என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம்
அறிவித்தது.
ஜெனிவாவில் இச்செவ்வாயன்று தொடங்கிய கல்வி குறித்த இந்த நான்கு நாள்
சர்வதேச கருத்தரங்கை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட யுனெஸ்கோ, 2015க்குள் உலகின் அனைத்துச்
சிறாருக்கும் ஆரம்பக் கல்வி வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றுரைத்தது.
வளரும்
நாடுகளில் ஆரம்பக் கல்வி பெறாமல் இருக்கும் 7 கோடியே 50 இலட்சம் சிறாரில் ஏறத்தாழ 55
விழுக்காட்டினர் சிறுமிகள் என்றும் யுனெஸ்கோ தெரிவித்தது.
இச்சர்வதேச கருத்தரங்கில்
கலந்து கொள்ளும் ஏறத்தாழ 1500 பிரதிநிதிகளில் 100 பேர் அமைச்சர்கள், உதவி அமைச்சர்கள்
மற்றும் வல்லுனர்கள் ஆவார்கள்.
அரபு நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய
சிறாரில் பள்ளிகளில் பெயரைப் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் 57 இலட்சம் சிறார்
இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் அவ்வறிக்கை கூறியது.