புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி – புனித பவுலின் மடல்களில் பெற்றோர் பிள்ளைகள் உறவு
நவ.24,2008. பாரதத் தந்தை மகாத்மா காந்திஜி வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் நம் நெஞ்சை
நெகிழ வைக்கின்றன. ஒருநாள் காந்திஜியிடம், அவரின் ஆன்மீக ஆலோசகரான கோபால கிருஷ்ண கோகலே
திடீரென ஒரு கேள்வி கேட்டார். காந்திஜி, நீங்கள் உங்கள் தாய் தந்தையோடு காட்டு வழியே
போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது திடீரென ஒரு புலி பசியோடு
பாய்ந்து வருகிறது. நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள் என்று கேட்டார். இக்கட்டான ஒரு
கேள்வியை கேட்டவுடன் யோசித்தார் காந்தியடிகள். யாரைக் காப்பாற்றுவது....அம்மாவையா அப்பாவையா....
சில நிமிடங்கள் கழித்து தீர்க்கமாகச் சொன்னார் - என் அப்பா அம்மாவுக்கு முன்னால் நான்
பாய்ந்து புலிக்கு இரையாகி இருவரையும் காப்பாற்றுவேன் என்று. மனித ஆத்மா, மகாத்மா ஆகமுடியும்
மகத்தான தியாகத்தால். காந்திஜியின் தீர்க்கமான இந்தப் பதிலானது, நாம் பெற்றோரிடம் எவ்வளவு
பாசம் வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன்
தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் புரிந்தானோ என்று
பிறர் சொல்லும்படி நடப்பதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவி என்று நான்மறை வேதமும் சொல்லுகிறது.
புனித பவுலும் தமது திருமடல்களில் பெற்றோர் - பிள்ளைகள் உறவு பற்றி தெளிவான அறிவுரைகளைக்
கொடுத்துள்ளார்.
கணவன்–மனைவியிரிடையே உறவு சுமுகமாக அமைய வேண்டுமெனில் அவர்களுக்குள்
தன்னலமற்ற அன்பும், ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடப்பதும் இன்றியமையாத பண்புகள் என்று
புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் வற்புறுத்தியிருப்பதைக் கடந்த வாரம் கேட்டோம்.
அதே திருமுகம் ஆறாம் அதிகாரம், முதல் வசனத்தில் பெற்றோர்-பிள்ளைகள் உறவிலும் பணிவு என்ற
பண்பு முக்கியமானது, முதன்மையானது என்று புனித பவுல் குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதுகிறார்
–
பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு
இதுவே ஏற்புடையது. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய
முதலாவது கட்டளை. இதனால் நீ நலம் பெறுவாய். மண்ணுலகில் நீடுழி வாழ்வாய் என்பதே அவ்வாக்குறுதி.-
எபேசி.6,1-3.
பிள்ளைகள் இளவயது முதற்கொண்டு கண்டிப்புடன் கட்டுப்பாட்டுடன் வளர
வேண்டும், அவர்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்கு விவிலியத்தின்
பல புத்தகங்களில் அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் தந்தையையும் தாயையும் மதித்து
நடக்க வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் ஏற்கனவே கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக்
கொடுத்தப் பத்துக் கட்டளைகளுள் நான்காவது கட்டளையில் உள்ளது. சீராக் புத்தகம், முன்றாம்
அதிகாரத்தில் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன.
குழந்தைகளே,
சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள். அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி
கிடைக்கும். தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும். தாயின் சாபம் அவற்றை
வேரோடு பெயர்த்தெறிந்துவிடும். குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவரது
வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக்
கடைப்பிடி. நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது.
அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.
பண்டைய யூத சமுதாயத்தில் பெற்றோருக்குக்
கீழ்ப்படிந்து நடப்பது ஞானம் பெற முதல் வழியாகக் கொள்ளப்பட்டது. லூக்கா நற்செய்தி 2ம்
அதிகாரம், வசனங்கள் 51,52 ல் சிறுவன் இயேசுவின் பண்பு பற்றி வாசிக்கிறோம்.
அவர்
அவரது பெற்றோருடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். இயேசு ஞானத்திலும்
உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்
எனவே இறைமகன் இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்து எல்லாப் பிள்ளைகளுக்கும்
எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். இந்தப பணிவு எனும் பண்பானது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு
மிக மிக முக்கியமானதும் இன்றியமையாததுமாகும். ஆயினும் இன்றைய கணணி இன்டர்நெட் உலகில்
இந்தப் பண்பு, வளரும் பிள்ளைகளுக்குக் கடினமாக இருப்பதாகவே தெரிகின்றது. இந்தக் காலத்துப்
பிள்ளைகள்ளல எது நம்ம சொல்லைக் கேக்குதுங்க என்று மனவருத்தத்தோடு எத்தனையோ பெற்றோர் சொல்லுகின்றனர்.
இந்நாட்களில் சென்னை சட்டக் கல்லூரியிலும், இன்னும், தமிழகத்தில் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும்
அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் இன்றையக் குழந்தைகளின் பண்புகள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகளை
எழுப்புகின்றன. எதற்கெடுத்தாலும் வாகன எரிப்பு, சாலை மறியல், அடிதடி, கத்திக்குத்து,
அரிவாள் வெட்டு, கொலை. நாளைய சமுதாயத்தில் வழக்குகளைத் தீர்த்து வைத்து அமைதிக்கு அடித்தளமிட
வேண்டிய சட்டக் கல்லூரி மாணவர்களே கோஷ்டி சண்டையிலும் வனமுறையிலும் ஈடுபடுவது நம் இதயத்தில்
ஆயிரம் வாள்களைப் பாய்ச்சுகின்றன. இன்றைய குழந்தை வளர்ப்பு முறையில் குறை உள்ளதோ அல்லது
தொலைக்காட்சிகள், இணையதள ஆக்ரமிப்புகள் இதற்குக் காரணமோ என்று சிந்திக்க வைக்கின்றது.
இன்று பல படித்த பிள்ளைகளின் நடவடிக்கைகள் பல முதியோர் இல்லங்களைத் திறக்க வைத்துள்ளன.
பிள்ளைகளே உங்கள் தந்தையர் கண்டிப்புடன் நடந்து கொண்டால் அது உங்களின் எதிர்காலம்
மீதுள்ள அக்கறையினால்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சீராக்கும் சொல்கிறார் - தம்
மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது கண்டிப்பார். அப்போது அவர் தம் இறுதி
நாள்களில் மகிழ்வோடு இருப்பார் என்று.
எனவே பிள்ளைகளே இயேசு போல பெற்றோருக்குப்
பணிந்து நடங்கள். காந்தியடிகள் போல கனவிலும் பெற்றோரைக் காப்பாற்றுங்கள்.
பிள்ளைகளுக்குப்
பணிவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் புனித பவுல், பெற்றோருக்கும் எபேசியர் 6ம் பிரிவில்
அறிவுரை வழங்கியுள்ளார்.
தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்.
மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள்
பிள்ளை
வளர்ப்பு முறை பற்றிச் சொல்லும் சீராக் புத்தகம், முப்பதாம் அதிகாரத்திலும்கூட பெற்றோர்
தம் பிள்ளைகளைக் கண்டிப்புடன் திருத்தி வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
பயிற்றுவிக்கப்படாத
குதிரை முரட்டுத்தனம் காட்டுகிறது: கட்டுப்பாடில்லாத மகன் அடக்கமற்றவன் ஆகிறான். இளைஞனாய்
இருக்கும்போதே அவனை அடக்கி வளர். சிறுவனாய் இருக்கும்போதே அவனை அடித்து வளர்: இல்லையேல்
அவன் அடங்காதவனும் கீழ்ப்படியாதவனுமாக மாறுவான். அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்.
பெற்றோர்
தம் பிள்ளைகளைக் கண்டிப்புடன் திருத்தி வளர்ப்பது மட்டுமல்ல, அவர்களுக்குத் தங்கள் செயல்களால்
எரிச்சல் மூட்டாமலும் அதேசமயம் அவர்களைக் கனிவுடனும் பாசமுடனும் நடத்த வேண்டும். நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு குழந்தைக்குத் தாயின் கருவறையே முதல் பள்ளிக்கூடம்.
எனவே பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு சமயக் கல்வியும் பொதுக் கல்வியும் அளித்து அவர்களைச்
சான்றோராக்கிப் பெருமைப்பட வேண்டும். வள்ளுவர் சொன்னது போல தந்தை மகற்காற்றும் உதவியைச்
செய்து மகிழ வேண்டும்.
ஆயினும் இன்றைய சமூகத்தில் பணம் பணம் என்று பல
அப்பாக்கள் குடும்பத்தை மறந்து விடுகின்றனர். மனைவியும் பிள்ளைகளும் அப்பாக்களின் பணத்தில்
நிறைவு காண்பதில்லை. அவரின் அன்புக்காக ஏங்குகின்றனர். இப்படித்தான் அந்த அணில் குடும்பம்
அப்பா அம்மா முன்று குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. நேரம் கிடைக்கும்
போதெல்லாம் குழந்தைகளைக் கொஞ்சி அன்பு மொழி பேசி வந்தார் அப்பா. இரவு பகலாக உழைத்தார்.
செல்வங்களைக் கொண்டு வந்து குவித்தார். ஆடம்பரமான வாழ்வு, அறுசுவை உணவு எனக் குடும்பம்
உல்லாசமாக இருந்தது. ஆனால் அப்பா முன்பு போல் அம்மாவிடம் அன்பு காட்டுவதில்லை. பிள்ளைகளையும்
கொஞ்சுவதில்லை. தனிமையில் வாடினர். அப்பாவின் அன்புக்காக ஏங்கினர். ஒருநாள் அப்பாவிடம்
சென்று, அப்பா, நீங்கள் ஏன் முன்பு போல் எங்களோடு பாசமாய்ப் பேசிக் கொஞ்சி விளையாடுவதில்லையே?
ஏன் என்று கேட்டனர். அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறியது. சனியன்களா, உங்களைக் கொஞ்சிக்
கொண்டிருந்தால் இவ்வளவு பணம் எப்படி வரும்? இது பொருளாதாரமயமாக்கப்பட்ட உலகம். உங்களுக்கு
நல்ல எதிர்காலம் வேண்டாமா? தேவையான பொருட்களைத் தேடிச் சேர்க்க வேண்டாமா? அவரவர் அறையில்
போய்த் தூங்குங்கள் என்று எரிச்சல்பட்டார். அப்படியே களைப்பில் தூங்கிப்போனார் அப்பா.
அணில் குஞ்சுகள் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்தன. அம்மாவிடம் போய், அம்மா, அப்பா எங்களுக்கு
எவ்வளவோ விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வருகிறார். அப்படியே ஒர் பாசமான அப்பாவையும் வாங்கிவரச்
சொல்லுங்கள் என்றன.
ஆம். குடும்பத்தில் அன்பின்றி பொருட்கள் மட்டும் நிரம்பியிருந்தால்
அதனால் பயன் உண்டா? அன்பர்களே, முன்யோசனை பிழைப்பு தரும். பின் யோசனை இழப்பு தரும்.