உளவியல் உலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன . நாம்
சிந்திப்பதால் நம்மையும் , உலகையும் ஆளமுடியும் என்பது நிஜம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது
. ஒரு குறிக்கோளை அடைய விரும்பும் ஒருவர் ,அவற்றைப் பெருவதற்கு வழியாகிய செயலில் உறுதியுள்ளவராக
இருக்கவேண்டும் . வாழ்க்கையில் பலருடைய துன்பங்களுக்குக் காரணம், மனத்தில் உறுதி இல்லாமையே
. வாழ்க்கையில் துன்புறுவோர் பலர் தாங்களே திட்டமிடாது , பிறரைப்பார்த்தோ , பிறர் கூறுவதைக்கேட்டோ
,சரிவரச்சிந்திக்காது, மெய்ப்பொருள் காணாது தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வார்கள் . நல்லனவற்றையும்
தீயனவற்றையும் ஆராய்ந்து நாம் தொழில் செய்ய ஒரு முடிவுக்கு வரவேண்டும் . இரு வெவ்வேறு
திக்கில் செல்லும் சாலையில் நின்று கொண்டு, எந்தப்பக்கம் போகப் பேருந்து வருகிறதோ அதில்
தொத்திக்கொண்டு போவதுபோல வாழ்க்கையில் திட்டமின்றி செயல்பட்டால் வாழ்க்கை என்னாவது .
ஆற்றில் வெள்ளம் வரும்போது சிறு மீன்கள் தண்ணீர் செல்லும் பாதையில் அடித்துச் செல்லப்படுவது
போல , வாழ்க்கையில் பலர் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம் . கடவுள் நம்மை சம்மட்டிகளாக
இருப்பதற்கே படைத்துள்ளார். அடிவாங்கும் பட்டறைக்கல்லாக இருப்பதற்கு அல்ல . நாம் ஆக்கப்பூர்வமாகச்
செயல்புரியவே அவர் நம்மைப் படைத்துள்ளார். அவரது சாயலிலேயே படைத்துள்ளார் . உழைக்கும்
கைகள் , உலகை உருவாக்கும் கைகளாகும் .
வரலாற்றில் பலர் தவறான போக்கில்
சென்று வாழ்வை இழந்துள்ளதைக் காண்கிறோம் . பல வாய்ப்புக்கள் நமக்கு முன் வைக்கப்படுகின்றன
. நன்மையான , உண்மையான , பிறரன்பைக் காட்டக்கூடிய வாய்ப்புத் தரப்படுகிறது . வேறு சில
வாய்ப்புக்கள் நம்மைக் குழப்பத்தில் தள்ளக்கூடியனவாக இருக்கலாம் .
நல்ல
குறிக்கோளைத் தேர்ந்து கொள்வது மட்டும் போதாது . அதை , பக்குவமாக என்ன விலை கொடுத்தும்
நாம் வாழ்வில் நிறைவேற்றவேண்டும் . கொள்கைகளின்படி நாம் வாழவில்லை என்றால் அவற்றால என்ன
பயன் . கடந்தது முடிந்துபோன ஒன்று . வருங்காலம் கடவுள் கைகளில் . நம் கைகளில் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே . நிகழ்காலம் பயனில்லாது அல்ல . அது நன்னீர் சுரக்கும் மணற் கேணி
. தொட்டனைத்தும் ஊறும் . இந்த நேரமே மிக முக்கியமானது என்கிறார் எமர்சன் என்னும் சிந்தனையாளர்
. அதை நழுவ விட்டால் இருள் வாழ்வில் மண்டிவிடும் .
நாள் என ஒன்றுபோல்
காட்டி உயிர் ஈரும் வாள் இந்த நாள் என்பது . எனவே நன்மையானதை நலமாக இப்பொழுதே தேர்வு
செய்தல் வேண்டும் .
ஈரமான மண் குயவனுடைய பட்டறையில் இருக்கும்போது ஒவ்வொரு
சிறிய அழுத்தமும் அதில் மாற்றங்களை உண்டு பண்ணும் . அது காய்ந்தபிறகும் , நெருப்பில்
இட்டு சுடப்பட்ட பிறகும் அதில் மாற்றங்களைக் கொண்டுவருதல் இயலாதது .
ஆங்கிலக்
கவிஞன் லார்டு பைரன் , தம் வாழ்நாட்களில் 10 நாட்கள்கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனக்
கூறியுள்ளான் . ஆங்கில மன்னன் எட்டாவது என்றி எட்டுப்பேரை மணந்திருந்தான் . அவன் செய்த
குளறுபடிகளுக்கு வரலாறு அவனைத் தூற்றுகிறது . அவனுக்கு வலது கரமாக இருந்த கர்தினால் ஊல்சி
என்பவர், மனம் மாறியவராக , என்றியை விட்டு விலகினார். கடவுளை மறந்து , ஒரு கயவனோடு காலத்தைக்
கழித்ததற்காக கதறி அழுது இறந்தார் .
சுதந்திரம் என்பது பயங்கரமான ஆயுதம்
. குழந்தை கையில் கொடுக்கப்படும் கூரிய வாள் போன்றது . எனவே நாம் அதனைப் பொறுப்புணர்வோடு
சரியாகப் பயன்படுத்தவேண்டும். தவறான போக்குக்கு இடம் கொடுக்கக் கூடாது .
தீயவை
தீய பயத்தலால், அவை தீயினும் அஞ்சப்படவேண்டும் . கடவுளுக்கு முன்உரிமை இல்லாத வாழ்வு,
நுனி மரத்திலேறி அடி மரத்தை வெட்டுவது போன்றதாகும் . அவர்தானே நம் வாழ்வுக்கு ஆதாரம்
. ஆதாரமும் , அடித்தளமுமின்றி வாழ்வேது ?
நெருப்புக்குள் தூங்க முயலுமா
? .
உலகமெல்லாம் நமதேயானாலும் நம் வாழ்வை இழந்தோமெனில் அதனால் வரும் பயன்
என்ன ? . ஒரே சமயத்தில் கடவுளுக்கும் சாத்தானுக்கும் வழிபாடு செய்ய முடியாது . நம் உள்ளமெனும்
கோவிலில் ஆண்டவனுக்கு இல்லாத இடமா ? எல்லாம் இறைவனின் மகிமைக்கே , எதுவும் அயலார் நன்மைக்கே
என நாம் வாழ்தல் வேண்டும் . எல்லோரும் இன்புற்றிருக்க நாம் வழி காணுதல் வேண்டும் . நாம்
பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும். இறைச்சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்வதெல்லாம்
நம்மை காத்துவரும் ஆண்டவனுக்கே செய்வதில்லையா ? . நாம் புரியும் நன்மையெல்லாம் ஆண்டவன்
இடும் முத்திரையோடு நூறு மடங்காகப் பலன் தரக்கூடியவை ! செய்யும் தொழிலே தெய்வமென்றால்
, நம் கடன் பணிசெய்து கிடப்பதே .
ஒரு சகோதரர் தையல் தொழில் செய்து வந்தார்
. அந்திய காலம் வந்தது . சாகும் தருவாயில் அவர் அருகிலிருந்தோரை அழைத்து வான் வீட்டுச்
சாவியைக் கொண்டு வருமாறு கூறினார் . மற்றவர்கள் இவர் எதைக் கேட்கிறார் என்று புரிந்து
கொண்டார்கள் . அவர் துணி தைக்கப் பயன்படுத்திய ஊசியைக் கொண்டு வந்தனர் . அவர் முகத்தில்
மகிழ்ச்சி ததும்பியது . இந்த ஊசியை வைத்துத்தான் நான் நாளும் ஆண்டவனுக்காக என் பணியைத்
தொடர்ந்தேன் என்றார் . இவ்வுலகை விட்டுப்போகும் இவ்வேளையில் எனக்கு இதுவே வான்வீட்டின்
திறவு கோல் என்றார் .
ஆம் , இறைவனின் விருப்பத்தை , நாம் உற்சாகத்தோடு செயல்படுத்தி
, நம் வாழ்வுக்கு நாம் பொறுப்பேற்று , பிறர்க்கென வாழும் தகைமையுடையோராக வாழ்ந்தால் நிம்மதி
நம் முகவரி தேடி ஓடி வராதா ?