2008-11-17 15:42:33

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை நிறுத்தப்பட வேண்டும் – இங்கிலாந்து ஆங்கிலக்கன் பேராயர்


நவ.17,2008. பிரிட்டனில் இந்துக்கள் எவ்விதம் நன்முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்த்த பின்னாவது இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து ஆங்கிலக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

ஆங்கிலக்கன் பேராயர் இந்திய கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியாவில் வன்முறைகள் கட்டுபடுத்தப்படவில்லையெனில் சர்வதேச அளவில் அது பெற்றிருக்கும் முக்கியத்துவம் இழக்கப்படும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலக்கன் கிறிஸ்தவ சபையின் கீழ் இயங்கும் வடஇந்திய மற்றும் தென் இந்திய திருச்சபைகளுக்கு அனுப்பியுள்ள இக்கடிதம், கட்டாய மதமாற்றம் என்பது எவ்வளவு தவறோ அதேபோல் கிறிஸ்தவர்களைப் பலவந்தமாக இந்துமறைக்குத் திருப்ப முயன்று வருவதும் தவறு என்கிறது.

பிர்மிங்காமிலுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோவிலாகிய பாலாஜி கோவிலை சென்று தரிசித்த பேராயர் வில்லியம்ஸ், நட்புறவின் அடையாளமாக அங்கு ஒலிவச் செடி ஒன்றையும் நட்டார்.








All the contents on this site are copyrighted ©.